டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில், சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் 'சவுத் குரூப்' என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. ’சவுத் குரூப்’ என்று அழைக்கப்பட்ட அந்த குழுவானது ஆம் ஆத்மி கட்சிக்கு 100 கோடி ரூபாய், லஞ்சம் வழங்கியதாக சிபிஐ குற்றம்சாட்டியது. இதில், முக்கிய நபர்களாகக் கருதப்படும் கவிதா, சரத் ரெட்டி மற்றும் மகுண்ட சீனிவாசுலு ரெட்டி ஆகியோர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களைக் குறிக்கவே 'சவுத் குரூப்' என்ற பதத்தை சிபிஐ பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் தான், சமீபத்தில் இந்த வழக்கை விசாரித்த டெல்லி ரேஸ் அவென்யூ நீதிமன்ற நீதிபதி ஜிதேந்திர் சிங், சிபிஐ- யின் இந்த சொல்லாடல் குறித்து தனது அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறார். அதன்படி, ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்தவர்களை ஏன் இப்படி ஒரு குழுவாக முத்திரை குத்துகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, இதுபோன்ற பதங்களைப் பயன்படுத்துவது பாரபட்சமாகத் தெரிய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், சட்டரீதியாக ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கும்போது, தனிநபர்களின் பெயர்களைப் பயன்படுத்தாமல், ஒரு பிராந்தியத்தின் பெயரைக் கொண்டு 'குழு' என அழைப்பது தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குவதாகவும் நீதிபதி சுட்டிக்காட்டினார். இந்த விவகாரம் அரசியல் ரீதியாக தென்னிந்திய மாநிலங்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிபிஐ-யின் அணுகுமுறை தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.