இந்தியாவின் ஐநா கனவு.. ஜவஹர்லால் நேரு சீனாவுக்கு விட்டுக் கொடுத்தது ஏன்?
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்குக் கிடைக்கவிருந்த நிரந்தர உறுப்பினர் இடத்தை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு சீனாவுக்குத் தாரை வார்த்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக இந்திய அரசியலில் விவாதிக்கப்பட்டு வருகிறது. 1950களில் நிலவிய பனிப்போர்ச் சூழலில், அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் ஆகிய நாடுகள் இந்தியாவுக்குப் பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் வழங்க முன்வந்ததாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், நேரு இந்த வாய்ப்பை ஏற்க மறுத்தார். இருப்பினும் அதற்குப் பின்னால் வலுவான சில ராஜதந்திரக் காரணங்கள் இருந்தன.
குறிப்பாக, ஆசியாவின் இரு பெரும் நாடுகளான இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே ஆசிய பிராந்தியத்தில் அமைதி நிலவும் என்று நேரு உறுதியாக நம்பினார். சீனா போன்ற ஒரு மிகப்பெரிய நாட்டை ஐநா சபையிலிருந்து ஒதுக்கி வைப்பது உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக அமையும்என்றும், அந்த இடத்திற்குச் சீனாவே தகுதியானது என்றும் அவர் கருதினார்.
’இந்தி-சீனி பாய் பாய்' என்ற கொள்கையின் அடிப்படையில் சீனாவுக்கு ஆதரவு அளித்த நேரு, சீனாவின் உறுப்பினர் பதவியை இந்தியா தட்டிப் பறிப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க விரும்பவில்லை. இருப்பினும், அன்று நேரு காட்டிய அந்தப் பெருந்தன்மைக்கு மாறாக, இன்று அதே சீனா தனது 'வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் முயற்சிக்குத் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்த சூழலில், நேருவின் இந்த 'பஞ்சசீலக் கொள்கை' ஒரு தொலைநோக்குப் பார்வையா அல்லது வரலாற்றுத் தவறா என்பது இன்றும் ஒருதீராத விவாதமாகவே தொடர்கிறது.

