கடந்த வருடம் பெங்களூரு தொழில்நுட்ப வல்லுநர் அதுல் சுபாஷ் என்பவர் தனது மனைவி மற்றும் மாமியாரால் துன்புறுத்தப்படுவதாக கூறி 24 பக்க குறிப்பு மற்றும் 90 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை பதிவு செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தியாவை தாண்டி உலக அளவில் கூட பேசு பொருளானது. அதனைப்போலவே, தற்பொழுது டெல்லியில் கஃபே உரிமையாளர் ஒருவர் தனது மனைவி மற்றும் மாமனாரால் பாதிக்கப்பட்டதாகக் கூறி தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டெல்லி கஃபே உரிமையாளர் புனித் குரானா (40) தான் இறப்பதற்கு முன் பதிவு செய்யப்பட்ட ஒரு வீடியோவில், அவரது மனைவி மனிகா பஹ்வா மற்றும் மனைவியின் தந்தை ஆகியோர் தன்னை மனரீதியாக சித்திரவதை செய்ததாகவும் தன்னால் நிறைவேறாத கோரிக்கைகளை முன்வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது?
டெல்லியைச் சேர்ந்த புனித் குரானா மற்றும் மாணிகா 2016ல் திருமணம் செய்து கொண்டனர். புகழ்பெற்ற வூட்பாக்ஸ் கஃபேவையும் இருவரும் நடத்தி வந்தனர். ஆனால் திருமணம் முடிந்து 2 ஆண்டுகளுக்குள் இவர்களின் உறவு மோசமடைந்ததால் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில்,நேற்று மாடல் டவுன் பகுதியில் புனித் குரானா தற்கொலை செய்துக்கொண்டு இருக்கிறார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக தனது செல்போனில், வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில், ”விவாகரத்து நடவடிக்கைகளின் போது எனக்கும் மானிக்கா குடும்பத்தினரிடையே கடுமையான தகராறு ஏற்பட்டது. விவாகரத்திற்கு இழப்பீடாக மானிக்கா மேலும் 10 லட்சம் கேட்ட நிலையில், அதை என்னால் கொடுக்க முடியவில்லை. என் பெற்றோர்களிடமும் கேட்க முடியவில்லை... மேலும் அளவுக்கு அதிகமான நிபந்தனைகளுடன் எனது மனைவியும் அவரது தந்தையும் என்னை மேலும் சித்தரவதை செய்கின்றனர். இந்த அழுத்தத்தைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்” என்று அந்த வீடியோவில் புனித் கூறியுள்ளார்.
புனித் குடும்பத்தினர் கூறுவது என்ன?
மனிகா பஹ்வா அவரது சகோதரி மற்றும் அவரது பெற்றோர்கள் புனித்தை தொடர்ந்து துன்புறுத்தியதாகவும் அவர்கள் பொருளாதார ரீதியாகவும், மனதளவிலும் பிரச்னைகளை ஏற்படுத்தினார்கள் என்று புனித் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
மேலும், புனித்தின் சகோதரி பேசுகையில், ”புனிதத்தின் சமூக வலைத்தள கணக்குகளை மானிகா ஹேக் செய்துள்ளார். புனித் சித்திரவதை செய்யப்பட்ட விவரங்கள் அடங்கிய 59 நிமிட வீடியோவும் அதில் உள்ளது ”என்று கூறியுள்ளார்.
புனித்தின் தாயார், ”எனது மகன் தனது பிரச்னைகளை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை. அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து எனது மகனை சித்திரவதை செய்தனர். எங்களுக்கு நீதி வேண்டும்” என்று கூறினார்.
சம்பவம் நடந்த அன்று...
டிசம்பர் 30ம் தேதி புனித் மற்றும் மானிக்கா இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், 31ம் தேதி மாலை 4.30 மணியளவில் புனித் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த போலிசார், புனித்தின் தற்கொலையை உறுதி செய்ததுடன், புனித்தின் அறிக்கை மற்றும் அழைப்பு பதிவுகள் அடங்கிய மொபைல் போனை ஆதாரமாக கைப்பற்றினர். வீடியோ ஆதாரத்தை அடிப்படையாக வைத்து மானிக்கா மற்றும் அவரது தந்தையைக் கைது செய்து வழக்கை விசாரித்து வருகின்றனர்.