west bengal, congress எக்ஸ் தளம்
இந்தியா

மேற்கு வங்கம் | 19 ஆண்டுகளுக்குப் பின் தனித்துப் போட்டியிடும் காங்கிரஸ்!

மேற்கு வங்கத்தில் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அதிரடியாக முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

PT WEB

மேற்கு வங்கத்தில் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அதிரடியாக முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

மேற்கு வங்கத்தில் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அதிரடியாக முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து கடந்த தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், மாநிலத்தில் உள்ள 294 தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களை களமிறக்கி தனித்து களம்காண காங்கிரஸ் முடிவுசெய்துள்ளது. டெல்லியில் மேற்குவங்க மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன்,கட்சித் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் நடத்திய ஆலோசனையின்போது, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2001சட்டமன்றத் தேர்தலில் 26 இடங்களில் வென்ற காங்கிரஸ், 2006 தேர்தலில் 21 இடங்களைக் கைப்பற்றியது. 2011இல் 42 இடங்களிலிலும், 2016 தேர்தலில் 44 இடங்களிலும் காங்கிரஸ் வென்ற நிலையில், 2021 தேர்தலில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை.அதனுடன், கட்சியின் வாக்கு வங்கி 3.03 சதவீதமாக குறைந்தது.

காங்கிரஸ்

இடதுசாரிகளுடனான கூட்டணியால் கட்சியின் சொந்த அடையாளத்தை இழந்து வருவதாக காங்கிரஸ் நிர்வாகிகள் கவலை தெரிவித்து வருகின்றனர். தனித்துப் போட்டியிட்டால் மட்டுமே, காங்கிரஸ் கட்சி செல்வாக்கு உடைய மால்டா, முர்ஷிதாபாத், உத்தரதினஜ்பூர் போன்ற மாவட்டங்களில் மீண்டும் வலுப்பெற முடியும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மறுபுறம் 2001, 2006, 2011 தேர்தல்களில் ஒரு இடத்தைக்கூட கைப்பற்றாத பாஜக, 2016இல் 3 இடங்களில் வென்றது. அதன் தொடர்ச்சியாக 2021 தேர்தலில் 77 இடங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றது. காங்கிரஸின் முடிவால், எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிந்து, தங்களுக்குச் சாதகமாக அமையும் என பாஜகவினர் கருதுகின்றனர். காங்கிரஸின் முடிவால், திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் ,பாஜக மற்றும் காங்கிரஸ் என நான்கு முனைப் போட்டியுடன், சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.