உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கு ஒன்றின் விசாரணையின்போது கூறிய கருத்துகளின் பின்னணியில், அமெரிக்காவில் படித்து வரும் அபிஜீத் திப்கே என்பவரால் இன்ஸ்டாவில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்ற பக்கம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து, அந்தக் கட்சிக்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகிய நிலையில், ஆளும் பாஜகவின் சமூக வலைதளப் பக்கங்களை விட அதிக பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையைப் பெற்றது. சமூக வலைதளங்களில் மட்டுமே, அரசின் மீது விமர்சனங்களை முன்வைத்த அந்தக் கட்சி, தொடர்ச்சியான, நீட் மற்றும் சிபிஎஸ்இ முறைகேடுகளுக்குப் பிறகு, கடந்த கடந்த ஜூன் மாதம் டெல்லியில் முதன்முறையாக போராட்டத்தில் ஈடுபட்டது. இதில், ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றதுடன், அக்கட்சியின் நிறுவன அபிஜீத் திப்கேவும் கலந்துகொண்டார்.
தொடர்ந்து, அக்கட்சியினர் கல்வித் துறையில் நடக்கும் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதுடன், மத்தியக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுத்தினர். டெல்லியைத் தொடர்ந்து, பெங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், அவர்களின் போராட்டத்து மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இந்த சூழலில் தான் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி கட்சியினர் கடந்த ஜூன் 20-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் தற்போது 18-வது நாளை எட்டியிருக்கிறது.
இதற்கிடையில், போராட்டத்தின் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் ஆர்வலரும், கல்வியாளருமான சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரது போராட்டம் இன்றுடன் 10-வது நாளை எட்டியிருக்கிறது. போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்ட தகவலின்படி, இதுவரை அவர் சுமார் 7.3 கிலோ எடையை இழந்துள்ளார். ரத்த அழுத்தம் மற்றும் ரத்தச் சர்க்கரை அளவிலும் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான அபிஜீத் திப்கே, "இன்னும் எவ்வளவு காலம் அரசு எங்கள் குரலைப் புறக்கணிக்கப் போகிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்து கொண்டிருந்தாலும், மத்திய அரசு இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கிடையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட போதிலும் தனது கோரிக்கைகள் நிறைவேறும் வரை உண்ணாவிரதத்தை கைவிட மாட்டேன் என்ற உறுதியில் சோனம் வாங்சுக் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.