மாதிரிப்படம்
மாதிரிப்படம் pt web
இந்தியா

உத்தரப்பிரதேசம் - நண்பர்களாலேயே படுகொலை செய்யபட்ட கல்லூரி மாணவர்!

Angeshwar G

பிபிஏ முதலாம் ஆண்டு படிக்கும் யஷ் மிட்டல் என்ற கல்லூரி மாணவர் கிரேட்டர் நொய்டாவில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் படித்து வந்தார். கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி யஷ் மிட்டல் காணாமல் போனதாக அவரது தந்தை பிரதீப் மிட்டல் கிரேட்டர் நொய்டா காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்தார்.

தனது மகன் மீண்டும் கிடைக்க வேண்டும் என்றால் ரூ. 6 கோடி பணம் கொடுக்க வேண்டும் என்ற குறுஞ்செய்திகள் வந்த பிறகே பிரதீப் மிட்டல் காவல்நிலையத்தில் புகாரளித்ததாக என்டிடிவி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து காவல்துறையினர் பல்வேறு குழுக்களை அமைத்து விசாரணையை தொடங்கினர். தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பல்கலைக்கழகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் யஷ், கடந்த திங்கள்கிழமை பல்கலைக்கழகத்தில் இருந்து செல்பேசிக்கொண்டே வெளியேறிய காட்சிகள் இருந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் யஷ்ஷின் தொலைப்பேசி தொடர்புகளை ஆய்வு செய்தனர். அப்போது அவர் ரச்சித் என்பவருடன் பேசியது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரை விசாரித்தனர்.

இதில், யஷ் தனது நண்பர்களுடன் பிப்ரவரி 26 ஆம் தேதி கஜ்ரௌலாவில் நடந்த பார்ட்டிக்கு சென்றார். அதேநாளில், அம்ஹோரா திக்ரியா பகுதிகளில் உள்ள காட்டுப்பகுதிக்கு நண்பர்களுடன் யஷ் சென்றுள்ளார். அங்கு மது அருந்தியுள்ளனர். இதனை அடுத்து சண்டை வந்து வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், நண்பர்களே அவரை கொலை செய்தது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், கொலை செய்யப்பட்ட யஷ் உடலை வயல்வெளிகளில் 6 அடி ஆழமுள்ள குழியில் புதைத்துள்ளனர். இதன்பின் காவல்துறையின் கவனத்தை திசைதிருப்ப யஷ்ஷின் செல்போனை பயன்படுத்தி ரூ.6 கோடி கேட்டு குறுஞ்செய்தி அனுப்பியதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து தாத்ரி காவல் நிலையம் மற்றும் ஸ்வாட் குழுவினர் யஷ் மிட்டலின் உடலை அவரது குடும்பத்தினர் முன்பு மீட்டுள்ளனர்.

இந்த வழக்கில் ரச்சித் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற குற்றவாளிகளான சுபம், சுஷாத் மற்றும் சுமித் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த நவம்பரில் யஷ், இந்நபர்களுடன் நண்பர்களானது விசாரணையில் தெரியவந்துள்ளது.