செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
சீனாவில் கடந்த மாதம் மனித உருவ ரோபோக்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் ரோபோக்கள் ஓடுதல், குத்துச்சண்டை செய்தல், நடனமாடுதல் போன்றவற்றை செய்தன. சில ரோபோக்கள் 100 மீட்டர் ஓட்டத்தில் உசைன் போல்ட்டைவிட வேகமாக ஓடியதாகவும் கூறப்பட்டது. ஆனால், போட்டி முடிந்து இரண்டு நாட்களிலேயே சீன ராணுவ நாளிதழ் வெளியிட்ட செய்தி கவனத்தை ஈர்த்தது. ஆய்வகங்களில் உருவாகும் புதிய தொழில்நுட்பங்களை விரைவாக ராணுவப் பயிற்சிக்கும், போர்க்களப் பயன்பாட்டுக்கும் கொண்டுவர வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, மனித உருவ ரோபோக்களை ராணுவத்தில் பயன்படுத்த சீனா தீவிரமாக முயற்சி செய்து வருவது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், 100-க்கும் மேற்பட்ட சீன ராணுவக் கொள்முதல் அறிவிப்புகள், ஆய்வுகள், காப்புரிமைகள் மற்றும் அரசு ஆவணங்களை ஆய்வு செய்துள்ளது. அதன்படி, எதிரிகள் இருக்கும் கட்டடங்களுக்குள் ரோபோக்களை அனுப்பி தேடுதல் நடத்துவது, உளவு பார்ப்பது, ஆபத்தான இடங்களில் பணிகளை மேற்கொள்வது போன்ற பயன்பாடுகள் குறித்து சீனா ஆய்வு செய்து வருகிறது. வீரர்களுடன் இணைந்து ரோபோக்கள் கட்டடங்களுக்குள் சென்று அறை அறையாக சோதனை நடத்தும் முறையும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. எதிரிகளின் பகுதிக்குள் சென்று அங்குள்ள இடங்களை அடையாளம் காண்பது, இலக்குகளைக் கண்டுபிடிப்பது போன்ற பயிற்சிகளும் ரோபோக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அதேநேரத்தில், எளிய உளவு அல்லது சிறிய பொருட்களை எடுத்துச் செல்லும் பணிகளுக்கு நான்கு கால்கள் அல்லது சக்கரங்களைக் கொண்ட ரோபோக்கள் குறைந்த செலவில் பயன்படுத்தப்படலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். மனித உருவ ரோபோக்கள் இன்னும் போர்க்களத்தில் பயன்படுத்தும் அளவுக்கு முழுமையாகத் தயாராகவில்லை. அதிக மின்சாரம் தேவைப்படுவது, எதிர்பாராத சூழல்களில் சரியாகச் செயல்படுவதில் சிக்கல் இருப்பது போன்ற பிரச்னைகள் உள்ளன.
இந்த பிரச்னைகள் தீர்க்கப்பட்டால், அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் மனித உருவ ரோபோக்கள் போர்க்களத்தில் அதிகமாக பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனா மட்டுமின்றி, அமெரிக்காவும் ராணுவப் பயன்பாட்டுக்கான மனித உருவ ரோபோக்களை உருவாக்கி வருகிறது. உளவு, பாதுகாப்பு, தடைகளை அகற்றுதல், ஆபத்தான பகுதிகளில் பணிபுரிதல் உள்ளிட்ட பணிகளுக்கு அவற்றைப் பயன்படுத்துவது குறித்து அமெரிக்க ராணுவமும் ஆய்வு செய்து வருகிறது. ஆனால், மனிதர்களைத் தாக்குவது போன்ற முக்கிய முடிவுகளை ரோபோக்கள் தாங்களாகவே எடுப்பது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன. பொதுமக்கள், எதிரி வீரர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் சரணடைந்தவர்களை வேறுபடுத்துவது போன்ற விஷயங்களில் மனிதர்களின் கட்டுப்பாடு அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.