ஹரித்வார்
ஹரித்வார் முகநூல்
இந்தியா

ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன்... ‘அதிசய சிகிச்சை’யென கங்கையில் பெற்றோரே மூழ்கடித்த அவலம்!

ஜெனிட்டா ரோஸ்லின்

நேற்றைய தினம் டெல்லியில் இருந்து உத்தரகாண்ட்டின் ஹரித்வாரில் உள்ள ஹர்-கி-பவுரியிக்கு (கங்கை நதிக்கு) தங்களின் 7 வயது மகனுடன் வந்துள்ளனர் ஒரு பெற்றோர். இச்சிறுவன் ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார். இவர்களுடன் அவர்களின் உறவுக்கார பெண்ணொருவரும் வந்துள்ளார்.

முன்னதாக இப்பெற்றோரிடம் ‘ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உங்களது மகனை கங்கை ஆற்றில் நன்கு மூழ்க செய்தால் அதிசயம் நடந்து நலம் பெறுவார்’ என்று சிலர் சொல்லியதாக தெரிகிறது. அதை நம்பிய அந்தப் பெற்றோர் மற்றும் அந்த உறவுக்காரர் அச்சிறுவனின் உணர்வுகளையும் உடல்நலனையும் பொருட்படுத்தாமல் கங்கைநீரில் பலமுறை அவரை மூழ்கடித்துள்ளனர். அந்த உறவுக்கார பெண் குழந்தையை மூழ்கடித்த வேளையில், அருகில் இருந்த சிறுவனின் பெற்றோரும் மந்திரம் கூறிக்கொண்டு எதனையும் பொருட்படுத்தாமல் நின்றுள்ளனர்.

அவர்களுக்கு எதிர்க்கரையில் இருந்த ஒருவர் எதார்த்தமாக எடுத்த வீடியோவில் இந்தக் கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது. அவர் இதை சுதாரித்துக்கொண்டு, குழந்தையை விடும்படி வேகமாக அக்கரையில் இருப்போருக்கு உரக்க கத்தியுள்ளார். சத்தம் கேட்டு சிறுவனுக்கு அருகிலிருந்தோர் அப்பெண்னை தடுத்துள்ளனர்.

ஆனால் அப்பெண் அதனை நிறுத்தாமல், ‘நிச்சயம் குணப்பெற்றுவிடுவான் சிறுவன்’ என்று நம்பி குழந்தையை மூழ்கடித்துள்ளார். ஒருகட்டத்தில் குழந்தையை அப்பெண்ணிடமிருந்து மக்கள் பிடுங்கியுள்ளனர். இதற்காக அப்பெண் அவர்களை அடித்துள்ளார். அதை பொருட்படுத்தாத அவர்கள், குழந்தையின் முதலுதவிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் குழந்தை இறந்துவிட்டது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுவனை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காவல்துறை அதிகாரி தரப்பில் நேற்று தெரிவிக்கையில், “ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர்களது மகனை சர் கங்கா ராம் மருத்துவமனையில் வைத்து கிசிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால் மருத்துவர்கள் கைவிட்டதால் இங்கு அழைத்துவந்து இப்படி செய்தால் அதிசயம் நடந்து குணம்பெறுவர் என்று நம்பி இச்செயலை செய்துள்ளனர்” என்றனர்.

இன்றைய தினம் மாவட்ட காவல்துறை தெரிவிக்கையில், “குழந்தையின் இறப்புக்கு காரணம், அவர் மூழ்கடிக்கப்பட்டது அல்ல. குழந்தை குளிரால் இறந்தாரா அல்லது ஏற்கெனவே இறந்திருந்தாரா என்பதையெல்லாம் விசாரிக்கிறோம்” என்றுள்ளனர்.