பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் முகநூல்
இந்தியா

விமானத்தில் உறுதிசெய்யப்பட்ட கோளாறு... அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்!

லண்டனில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டது. அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய அதே ரக போயிங் விமானம், பெரும் ஆபத்தில் இருந்து தப்பியிருக்கிறது.

PT WEB

அகமதாபாத்... கடந்த 4 நாட்களாக இந்தப் பெயரைக் கேட்காதவர்களே இருந்திருக்க மாட்டார்கள். ஒட்டுமொத்த நாட்டு மக்களின் இதயத்தையும் கணக்கச் செய்தது வியாழனன்று நேரிட்ட ஏர் இந்தியா விமான விபத்து. இந்த சம்பவத்தில் உறவுகளை பறிகொடுத்த உறவினர்களின் கதறல் இன்னும் அடங்கவில்லை.

இப்படியான சூழலில் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான அதே ரக போயிங் விமானம் ஒன்று பெரும் விபத்தில் இருந்து தப்பியிருக்கிறது.

இந்திய நேரப்படி, ஞாயிறன்று மாலை 5: 10 மணிக்கு, லண்டனில் இருந்து சென்னைக்கு, 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம். இது, பிரிட்டிஷ் ஏர்வேஸின் Boeing 787-8 Dreamliner விமானம். லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தின் 27R என்ற ஓடுபாதையில் இருந்து மேலெழும்பி பறக்கத் தொடங்கியது. அப்போது விமானத்தின் இறக்கையில் உள்ள Flabs பகுதியில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானிகள் உறுதி செய்தனர்.

சுமார் 9,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும்போது ஏற்பட்ட இந்த தொழில்நுட்பக் கோளாறு, விமானத்தை தரையிறக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, விமானத்தின் இடதுபுற இறக்கையில் இருந்து அதிக அளவில் உந்துதல் கிடைக்காததால், உடனடியாக லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அவசர நிலையை உணர்ந்த விமான நிலைய நிர்வாகம், விமானத்தை தரையிறக்குவதற்கான சிக்னல் கொடுத்தது. சிக்கலை எதிர்கொண்ட விமானிகள், பாதுகாப்பு நடைமுறையின் கீழ் விமானத்தில் இருந்த எரிபொருளை கணிசமாக வெளியேற்றிவிட்டு, அதன் பின் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினர். விமானத்தில் இருந்த பயணிகளும் விமானக் குழுவினரும் பாதுகாப்பாக உள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு எதனால் ஏற்பட்டது என்பது பற்றி, பிரிட்டிஷ் ஏர்வேஸ் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

விமானத்தை இயக்கிய விமானிகள், "flap adjustment failure"-க்குப் பிறகு, விமானம் தரையிறக்கப்பட்டதாக தெரிவித்தனர். அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தும், இறக்கையில் இருக்கக்கூடிய "flap adjustment failure"ஆல் நேரிட்டதாக நிபுணர்கள் சிலர் கூறிய நிலையில், அதே ரக போயிங் 787-8 டிரீம் லைனர் விமானத்தில் இறக்கையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நல்வாய்ப்பாக விமானிகள் துரிதமாக செயல்பட்டு விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியதால் மீண்டும் நடக்கவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. புதிய தலைமுறைக்காக செய்தியாளர் பால வெற்றிவேல் நவநீதகிருஷ்ணன்....