இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் பிறகும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வரும் நிலையில், 2021ஆம் ஆண்டு நடத்தப்படவேண்டிய கணக்கெடுப்பு கொரோனா காரணமாக நடைபெறவில்லை. இந்தச்சூழலில் தான், 5 ஆண்டு தாமதத்திற்கு பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பு இந்தியா முழுவதும் தற்போது நடைபெற்று வருகிறது. முன்னதாக, வீடுகள் குறித்தான கணகெடுப்பு முதல் கட்டமாகவும் மனிதர்கள் மற்றும் சாதி குறித்தான கணக்கெடுப்பு இரண்டாம் கட்டமாகவும் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி இந்த மாதம் (செப்டம்பர்) இறுதி வரை இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. எனினும், மணிப்பூரில் நிலவி வரும் இனமோதல் காரணமாக அங்கு நடைபெறவில்லை.
தொடர்ந்து, மற்ற மாநிலங்களில் இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பிப்ரவரியில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தச்சூழலில் தான், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா மற்றும் உத்தராகண்ட் ஆகிய நான்கு மாநிலங்களில் அடுத்த வருடம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், அந்த 4 மாநிலங்களில் மட்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே நடத்தி முடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, இந்த 4 மாநிலங்களிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் 2026 டிசம்பர் 1 முதல் 2027 ஜனவரி 4 வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், பிற மாநிலங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு வழக்கமான கால அட்டவணைப்படி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.