ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) பிரதிநிதியான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது.
இந்த நிலையில், நேற்று பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கு விசா மறுப்பு ஆகியவை இதில் அடங்கும். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் உடனான இராஜதந்திர உறவுகளை இந்தியா அதிரடியாக குறைத்துள்ளது.
தொடர்ந்து மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் அரசின் எக்ஸ் தள பக்கமும் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது எடுக்கப்பட்ட நவடிக்கைககைளின் தொடர்ச்சியாக இது பார்க்கப்படுகிறது. மறுபுறம், பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள ஆலோசகர்கள் வெளியேற, வெளியுறவுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் சாத் அகமது வாரைச், வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு வர வேண்டும் என அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து, வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு சென்ற பாகிஸ்தான் தூதரிடம் உத்தரவு நகலை அமைச்சகம் வழங்கியது. பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் விமானப்படை, ராணுவப்படை மற்றும் கடற்படை ஆலோசகர்கள் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான உத்தரவையும் பிறப்பித்துள்ளது. புதிய விசா விதிகள் குறித்தும் பாகிஸ்தான் தூதரிடம் தெரிவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். இதற்கிடையே, பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் அடுத்தடுத்த நகர்வுகள் குறித்து விவாதிக்க டெல்லியில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவுப்பிரிவுகளின் இயக்குநர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றதாக தெரிகிறது. இன்று மாலை டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக இக்கூட்டம் நடைபெற்றது.