மத்திய அரசு AI மூலம் உருவாக்கப்படும் வீடியோக்களை 3 மணி நேரத்துக்குள் நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. Deep Fake போன்ற தொழில்நுட்பங்கள் அதிகரித்து வரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் தவறான AI உள்ளடக்கத்தை தடுக்க தானியங்கி கருவிகளைப் பயன்படுத்த வேண்டும். விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும்.
தவறான உள்ளடக்கம் கொண்ட AI வீடியோக்களை 3 மணி நேரத்துக்குள் நீக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சமீப காலங்களாகவே AI ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் AI வீடியோக்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. Deep Fake, AI, grok போன்ற தொழில்நுட்பங்கள் அதிநவீனமாக மாறிவிட்டது. இதனால் எந்த வீடியோ உண்மை அல்லது எந்த வீடியோ AI என்பதையே கண்டுபிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்களை தெளிவாக அவை AI மூலம் உருவாக்கப்பட்டவை என்று வீடியோவில் குறியீடு வைக்க வேண்டும் என்றும், அப்படியான அடையாளம் கட்டாயம் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத, பாலியல் வன்முறை, தவறாக வழிநடத்தும் அல்லது மோசடியான AI உள்ளடக்கத்தைத் தடுக்க தானியங்கி கருவிகளைப் பயன்படுத்த சமூக ஊடக தளங்களுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இந்த விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று தளங்கள் பயனர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது எச்சரிக்க வேண்டும்.
அரசு அல்லது நீதிமன்றத்தால் சுட்டிக்காட்டப்பட்டால், அதுபோன்ற AI அல்லது Deep Fake வீடியோக்களை மூன்று மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நீக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருமுறை சேர்க்கப்பட்ட AI அடையாளத்தை நீக்கவோ, மறைக்கவோ தளங்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021ன் வரைவுத் திருத்தங்கள் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தங்கள் பிப்ரவரி 20 முதல் அமலுக்கு வருகிறது .