2026-27 கல்வியாண்டு முதல் 6-ஆம் வகுப்பிலிருந்து மூன்றாவது மொழியை (R3) அறிமுகப்படுத்துவதை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) கட்டாயமாக்கியுள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையின்படி, வாரியத்துடன் இணைக்கப்பட்ட அனைத்துப் பள்ளிகளும் ஏழு நாட்களுக்குள் இம்முடிவைச் செயல்படுத்த வேண்டும் என அது தெரிவித்துள்ளது.
புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், தாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்த மூன்றாவதாக ஓர் இந்திய மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது மறைமுகமாக இந்தியைத் திணிப்பதற்கான ஒரு வழியாக பார்க்கும் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மறுபுறம், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களுக்கு மத்திய அரசு, பள்ளிக் கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய தொகையை விடுவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.
இந்த நிலையில், 2026-27 கல்வியாண்டு முதல் 6-ஆம் வகுப்பிலிருந்து மூன்றாவது மொழியை (R3) அறிமுகப்படுத்துவதை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) கட்டாயமாக்கியுள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையின்படி, வாரியத்துடன் இணைக்கப்பட்ட அனைத்துப் பள்ளிகளும் ஏழு நாட்களுக்குள் இம்முடிவைச் செயல்படுத்த வேண்டும் என்றும், இது அவசரமானது மற்றும் கட்டாயமானது எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், “பாடப்புத்தகங்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்றாலும், அனைத்துப் பள்ளிகளும் உடனடியாக இதைச் செயல்படுத்தத் தொடங்க வேண்டும். பல பள்ளிகள் ஏற்கெனவே இந்த நடைமுறையைச் செயல்படுத்தத் தொடங்கிவிட்டதாகத் தெரியவந்துள்ளது. மீதமுள்ள அனைத்துப் பள்ளிகளும், இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 7 நாட்களுக்குள் இம்முடிவைச் செயல்படுத்துவதை உறுதிசெய்யுமாறு இதன்மூலம் அறிவுறுத்தப்படுகி்றது. R3-க்கான பாடப்புத்தகங்கள் விரைவில் கிடைக்கப்பெறும். இருப்பினும், பள்ளிகள் உள்ளூரில் கிடைக்கும் புத்தகங்கள் அல்லது இதர வசதிகளைப் பயன்படுத்தி, 6-ஆம் வகுப்பிலிருந்தே R3-ஐக் கற்பிக்கத் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
பள்ளிகள் தாங்கள் தேர்ந்தெடுத்த மூன்றாவது மொழியை முறையாக அறிவித்து, அதை 'OASIS' இணையதளத்தில் புதுப்பிக்க வேண்டும். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதை மண்டல அலுவலகங்கள் கண்காணிக்கும் என்றும் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது. தவிர, 6-ஆம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்படும் மொழிகள் மட்டுமே பிற்காலத்தில் (மேல்வகுப்புகளில்) பாடங்களாகத் தேர்வுசெய்யக் கிடைக்கும் என்று அது தெரிவித்துள்ளது. முன்னதாக, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 6-ஆம் வகுப்பு முதல் 3ஆவது மொழி கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.