சிபிஎஸ்இ மற்றும் நீட் தேர்வுகளில் நடந்த தொழில்நுட்பக் குளறுபடிகளை 16–19 வயதுடைய நால்வர் ஜென்-ஸி இளைஞர்கள் அம்பலப்படுத்தியதால், ஆன்லைன் மதிப்பீட்டு பிழைகள், இணையதள பாதுகாப்பு குறைபாடுகள், டெண்டர் முறைகேடுகள், சூப்பர் அட்மின் தரவு பாதுகாப்பு சிதைவு போன்றவை வெளிச்சத்துக்கு வந்தன.
சமூக வலைத்தளங்களில் வெறும் பொழுதுபோக்கு வீடியோக்களை மட்டுமே பதிவிடும் கூட்டமல்ல 'ஜென் ஸி' என்பதை தற்போதைய சமூகப் போக்கு நிரூபித்து வருகிறது. இந்தியாவின் சிபிஎஸ்இ மற்றும் நீட் தேர்வு முறைகளில் அரங்கேறிய தொழில்நுட்பக் குளறுபடிகளை நான்கு பதின்பருவ இளைஞர்களே அம்பலப்படுத்தினர். இதன் எதிரொலியாகவே, சிபிஎஸ்இ வாரியத்தின் தலைவர் மற்றும் செயலர் ஆகிய இரு உயர் அதிகாரிகள் அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
டெல்லியைச் சேர்ந்த 17 வயது மாணவர் வேதாந்த் ஸ்ரீவஸ்தவா சிபிஎஸ்இயின் ஆன்லைன் விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் இருந்த தவறுகளை முதன்முதலில் உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டினார். பெங்களூருவைச் சேர்ந்த 19 வயது நிசர்கா அதிகாரி (NISARGA ADHIKARY), சிபிஎஸ்இ இணையதளத்தில் இருந்த பாதுகாப்புக் குறைபாடுகளையும், அதன் வழியே மதிப்பெண்களை மாற்றியமைக்க முடியும் என்ற அதிர்ச்சி உண்மையையும் கண்டறிந்தார்
ஜார்கண்டைச் சேர்ந்த 17 வயது சார்தக் சித்தாந்த் (SARTHAK SIDDHANT), தகுதியற்ற நிறுவனத்திற்கு டெண்டர் விதிகளை மாற்றி ஒப்பந்தம் வழங்கப்பட்டதை ஆதாரங்களுடன் சமர்ப்பித்தார். துபாயைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ரைலன் அனில் (RYLEN ANIL), நீட் தேர்வை நடத்தும் என்டிஏ இணையதளத்தின் 'சூப்பர் அட்மின்' பக்கத்தின் பலவீனமான பாதுகாப்பு வளையத்தை உடைத்து, சுமார் 7,000 அதிகாரிகளின் ரகசியத் தரவுகள் பாதுகாப்பின்றி திறந்தே கிடந்ததை ஆதாரங்களுடன் எச்சரித்து சரிசெய்ய வைத்துள்ளார்.
இந்திய அரசியல் மற்றும் சமூகப் போக்குகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது இன்றைய ஜென் ஸி தலைமுறை.