calcutta hc
calcutta hc pt web
இந்தியா

“டீன் ஏஜ் பெண்கள், தங்களின் பாலியல் உந்துதல்களை கட்டுப்படுத்த வேண்டும்” - கொல்கத்தா உயர்நீதிமன்றம்

Angeshwar G

மேற்கு வங்கத்தில் இளைஞர் ஒருவர் மைனர் சிறுமியை காதலித்துள்ளார். கடந்த ஆண்டு சிறுமியுடன் உறவு கொண்டதாக போக்ஸோ வழக்கில் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார். அவ்வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து அந்த இளைஞர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். சிறுமியின் விருப்பத்தின் பேரிலேயே உறவு கொண்டதாக தெரிவித்திருந்தார்.

விசாரணையின் போது அந்த பெண் நீதிமன்றத்தில் ஆஜராகி தனது விருப்பத்தின் பேரிலேயே நடந்ததாகவும் அவரையே திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தார். ஆனால் இந்தியாவின் போக்ஸோ சட்டவிதிப்படி, பெண் 18 வயதிற்கு கீழ் இருக்கும்போது அது ஒருமித்த உறவாக இருந்தாலும் அது பாலியல் குற்றமாகவே கருதப்படும்.

இந்த வழக்கு நீதிபதிகள் சித்த ரஞ்சன் தாஷ் மற்றும் பார்த்தசாரதி சென் என இரு நீதிபதிகள் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. மேலும் “இளம் வயதில் கொள்ளும் (டீன் ஏஜ் வயதில்) பாலியல் உறவுகளால் சட்ட சிக்கல்கள் பல ஏற்படும். அதையெல்லாம் தவிர்க்க பள்ளிகளில் பாலியல் கல்வி வழங்கப்பட வேண்டும்” என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்தனர்.

மேலும், “டீன் ஏஜ் பெண்கள் பாலியல் உந்துதல்களை கட்டுப்படுத்த வேண்டும். இரண்டு நிமிட மகிழ்ச்சிக்கு இடமளிக்கும்போது அவர் சமூகத்தின் பார்வையில் தோற்றவராகவே கருதப்படுவார். பெண்கள் தங்களின் கண்ணியம் மற்றும் தங்களின் சுயமதிப்பை பாதுகாப்பது அவர்களின் கடமை.

டீன் பெண்கள் உட்பட அனைத்து பெண்களையும் மதிக்க வேண்டியது ஆண்களின் கடமை. அதற்கு டீன் ஏஜ் ஆண் தனது மனதைப் பயிற்றுவிக்க வேண்டும்” என்றும் கொல்கத்தா உயர்நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.