model image google gemeni
இந்தியா

இதயம் முதல் குடல் வரை.. எடுக்கப்பட்ட உறுப்புகள்.. வெனிசுலாவில் இந்திய மாலுமிக்கு நேர்ந்த சோகம்!

இந்த கொடூரமான சம்பவம் குறித்து மத்திய அரசுக்கு இந்திய மாலுமிகள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

வெனிசுலாவில் மரணமடைந்து, தாயகம் கொண்டுவரப்பட்ட இந்திய மாலுமி ராகேஷ் சௌஹானின் உடலில் எந்தவொரு முக்கிய உறுப்புகள் எதுவும் இல்லாதது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், தியோரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 33 வயதான ராகேஷ் சௌஹான். இவர், தனது மனைவி, ஆறு மாதக் குழந்தை, தந்தை மற்றும் சகோதரருடன் மும்பையில் வசித்து வந்தார். இதற்கிடையே வெனிசுலாவில், மெர்ச்சண்ட் நேவியில் 'மரைன் ஃபிட்டர்' ஆக பணியாற்றி வந்த நிலையில், கடந்த மே மாதம் ராகேஷ் சௌஹான் தந்தையை அழைத்த கப்பல் நிறுவனம், தங்ளது மகன் கப்பலில் இருந்து தவறி விழுந்து காயமடைந்ததாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் உயிர் பிழைப்பதற்கு ஐந்து சதவிகிதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறகு அன்று மாலையே ராகேஷ் இறந்துவிட்டதாகவும் நிறுவனம் குடும்பத்தினருக்குத் தெரிவித்துள்ளது.

மேலும், தலைச்சுற்றல் காரணமாக அவர் தவறி விழுந்ததாகவும், பலத்த காயமடைந்ததாகவும், சிகிச்சையின்போது மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அவரது உடல் ஒரு மாதமாக வெனிசுலாவில் 'டீப் ஃப்ரீசரில்' வைக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் மாத இறுதியில் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால், உடலுடன் வரவேண்டிய வெனிசுலா அரசின் அதிகாரப்பூர்வ பிரேதப் பரிசோதனை அறிக்கை எதுவும் வரவில்லை.

மேலும், உடலைப் பெற்றதற்கான ரசீது போலியாகத் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கப்பலின் பெயர், அவர் உண்மையில் பணியமர்த்தப்பட்ட கப்பலின் பெயருடன் பொருந்தவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இந்தியாவில் மீண்டும் ஓர் உடற்கூராய்வு செய்யக் கோரினர். அப்போது, ராகேஷின் உடலில் இதயம், மூளை, இரண்டு நுரையீரல்கள், கல்லீரல், சிறுநீரகங்கள், கணையம், மண்ணீரல், வயிறு மற்றும் குடல்கள் என ஒரு முக்கிய உள்உறுப்புகூட இல்லை.

உடலில் எந்த உறுப்புகளும் இல்லாததால், இந்திய மருத்துவர்களால் ராகேஷ் சௌஹான் எப்படி இறந்தார் என்பதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை. மேலும், அவரது உடல் ஏற்கெனவே அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, கழுத்திலிருந்து அடிவயிறு வரை 22 தையல்கள் போடப்பட்டிருந்தன. இதனால், இந்திய மாலுமிகள் சங்கம் மற்றும் ராகேஷின் மனைவி ரஞ்சனா ஆகியோர் இந்த விவகாரத்தில் பெரும் சதி இருப்பதாகவும் உரிய விசாரணை நடத்தி இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் கோரியுள்ளனர். மேலும், இந்த கொடூரமான சம்பவம் குறித்து மத்திய அரசுக்கு இந்திய மாலுமிகள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.