2026-ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல், ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இங்கு 294 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றாலும் அதில் பவானிபூர்தான் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. இங்கு முதல்வர் மம்தா பானர்ஜி களமிறங்கியுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவரும் பாஜகவின் முதல்வர் வேட்பாளர்களில் ஒருவராக கருதப்படுபவருமான சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். கொல்கத்தா மாநகரத்தின் தெற்கு பகுதியான பவானிபூரில் மம்தா தொடர்ச்சியாக 3 முறை வென்ற நிலையில் 4ஆம் முறையாக போட்டியிடுகிறார்.
பவானிபூரை தக்கவைத்துக்கொள்வதை கவுரவ பிரச்சினையாக பார்க்கிறார் மம்தா பானர்ஜி. ஆனால், மம்தாவை அவரது கோட்டையில் வீழ்த்தியே தீரவேண்டும் என்ற முனைப்பில் உள்ளது பாஜக. கடந்த தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரியிடம் மம்தா தோற்றிருந்தார். இந்த சூழலில் பவானிபூரில் வென்ற திரிணமூல் வேட்பாளர் ராஜிநாமா செய்த நிலையில் அங்கு நடந்த இடைத்தேர்தலில் நின்று மம்தா 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்றார்.
இந்த நிலையில்தான், சுவேந்து அதிகாரி இம்முறை நந்திகிராமில் மட்டுமல்லாமல் பவானிபூரிலும் போட்டியிட்டு மம்தாவிற்கு சவால் தருகிறார். 2024 மக்களவை தேர்தலில் இச்சட்டமன்றத்தொகுதியில் 8 ஆயிரம் வாக்குகளை மட்டுமே திரிணமூல் கூடுதலாக வென்றிருந்தது. மம்தாவிற்கு எதிராக சுவேந்துவை களமிறக்கிய பாஜகவின் இந்த நகர்வு யுக்தி ரீதியாகவும் கவனம் பெறுகிறது.
ஆனால், எதற்கும் சளைக்காமல் தனது பாணியில் ஆக்ரோஷமாக போராடுகிறார் மம்தா பானர்ஜி. அதி உயர் அழுத்த சூழல் நிலவும் பவானிபூர் தொகுதி மேற்கு வங்காளத்தை கடந்து நாட்டின் கவனத்தையே ஈர்த்துள்ளது.