mk stalin, pm modi x page
இந்தியா

விலகிய காங்கிரஸ்.. திமுக ஆதரவைப் பெற பாஜக புதிய திட்டம்.. நிறைவேறுமா மசோதா?

மக்கள்தொகை மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளை மறுபரிசீலனை செய்வதே இந்த மசோதாவாகும்.

Prakash J

நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறைக்கான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு திமுக எம்பிக்களின் ஆதரவைப் பெற பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.

தொகுதி மறுவரையறை மசோதா, அரசியலமைப்பு 131ஆவது திருத்த மசோதா மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் மசோதா ஆகிய 3 மசோதாக்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மக்களவையில் தாக்கல் செய்தது. அரசியலமைப்பு திருத்த மசோதாக்கள் நிறைவேற வேண்டும் என்றால் மொத்தமுள்ள 3இல் இரண்டு பங்கு ஆதரவு வேண்டும் என்ற சூழலில், தொகுதி மறுவரையறை மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 278 வாக்குகளும், எதிராக 211 வாக்குகளும் பதிவாகிய நிலையில், 3இல் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற தவறியதால் இந்த மசோதா தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

pm modi, mk stalin

மக்கள்தொகை மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளை மறுபரிசீலனை செய்வதே இந்த மசோதாவாகும். இந்த நிலையில்தான் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறைக்கான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு திமுக எம்பிக்களின் ஆதரவைப் பெற பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் தமிழக அரசியலில் நிகழ்ந்த மாற்றங்களால் காங்கிரஸ் தலைமையிலான I-N-D-I-A கூட்டணியில் திமுக தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு மக்களவையில் உள்ள 22 திமுக எம்பிக்களின் ஆதரவைப் பெற பாஜக பல்வேறு திட்டங்களை யோசித்து வருகிறது. இதன்படி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதுபோல் அனைத்து மாநிலங்களுக்கும் சமமான அளவில் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்பதற்கான வாக்குறுதியை தொகுதி மறுவரையறைக்கான அரசமைப்புத் திருத்த மசோதாவில் இணைக்க பாஜக அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

mk stalin, pm modi

திரிணாமுல் காங்கிரஸின் 20 அதிருப்தி எம்பிக்களின் ஆதரவோடு திமுகவின் 22 எம்பிக்கள் ஆதரவும் கிடைத்தால் மக்களவையில் தொகுதி மறுவரையறை அரசமைப்புச் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை 335ஆக உயரும். இருப்பினும், அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நிறைவேறுவதற்கு மொத்த எண்ணிக்கையான 543இல் மூன்றில் இரண்டு பங்கான 362 எம்பிக்களின் ஆதரவு தேவை.