மும்பை மேயர் பதவி தொடர்பாக பாஜக- ஏக்நாத் ஷிண்டே இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மும்பை மேயர் பதவிக்கு ரிது தவாடேவை பாஜக வேட்பாளராக அறிவித்துள்ளது. அதேபோல் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவுக்கு துணை மேயர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 15ஆம் தேதி நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில், 227 உறுப்பினர்களைக் கொண்ட மும்பை மாநகராட்சி 89 இடங்களை பாஜக வென்றது. அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா ஏக்நாத் ஷிண்டே பிரிவு, 29 இடங்களை வென்றது. கூட்டணியாக அவர்கள் இருவரும் பெரும்பான்மையைப் பெற்றனர். மேலும், மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றாலும் பெரும்பான்மை பெற முடியவில்லை. இதற்கிடையே, பாரதிய ஜனதாவின் பிரதானக் கூட்டணிக் கட்சியான சிவசேனா ஏக்நாத் ஷிண்டே பிரிவு, தனது 29 கவுன்சிலர்களை விடுதியில் பாதுகாத்து வைத்தது. மும்பை மேயர் பதவியை பாஜக வெல்ல ஏக்நாத் ஷிண்டே தரப்பின் 29 கவுன்சிலர்களும் மிக முக்கியமாக உள்ள நிலையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டது கேள்விகளை எழுப்பியது. மாநகராட்சியிலும் ஏக்நாத் ஷிண்டே பங்கு கேட்பதால்தான் மும்பை மேயர் தேர்வு தாமதமாகிறது எனக் கூறப்பட்டது. இரண்டரை காலத்திற்கு மேயர் பதவியோ அல்லது நிதி மற்றும் முக்கிய ஒப்புதல்களைப் பெற தமது தரப்பை நியமிக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், மேயர் பதவி தொடர்பாக பாஜக- ஏக்நாத் ஷிண்டே இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மும்பை மேயர் பதவிக்கு ரிது தவாடேவை பாஜக வேட்பாளராக அறிவித்துள்ளது. அதேபோல் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவுக்கு துணை மேயர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏக்நாத் ஷிண்டே சிவசேனா சஞ்சய் சாடியை துணை மேயர் பதவிக்கு பரிந்துரைத்துள்ளது.
மும்பை மேயர் பதவிக்கான தேர்தல் வருகிற பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெற இருக்கிறது. எதிர்க்கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தினாலும், மேயர் மற்றும் துணை மேயர் ஆகிய இரு பதவிகளையும் வெல்வதில் பாஜக-ஷிண்டே தலைமையிலான கூட்டணி நம்பிக்கையுடன் உள்ளது. 227 உறுப்பினர்களைக் கொண்ட மாநகராட்சியில் இந்தக் கூட்டணிக்கு தற்போது 118 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இது பெரும்பான்மைக்கான பலத்தை அளிக்கிறது. இதற்கிடையே, மகாராஷ்டிராவின் புனே, துலே, நாந்தேட்-வாகலா மற்றும் நவி மும்பை போன்ற பிற மாநகராட்சிகளிலும் பொதுப் பிரிவைச் சேர்ந்த பெண்கள் மேயர்களாகப் பதவியேற்றுள்ளனர்.
காட்கோபரைச் சேர்ந்த ரிது தவாடே, இரண்டு முறை வார்டு உறுப்பினராக இருப்பவர். அவர் 132வது வார்டு பிரதிநிதியாக உள்ளார். காங்கிரஸில் இருந்து விலகி 2012-இல் பாஜகவில் சேர்ந்த அவர், கட்சியின் மூத்த தலைவராக அறியப்படுகிறார். தவிர, மராத்தி மொழி அடையாளமாகவும் பார்க்கப்படுகிறார். மேலும், அவர் மும்பையின் கிழக்கு பறநகர்ப் பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மேயர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்ட முக்கியப் பெயர்களில் தவாடேவும் ஒருவர். ஷீத்தல் கம்பீர், ராஜஸ்ரீ ஷிர்வாட்கர், ஆஷா மராத்தே, ப்ரீத்தி சதாம் மற்றும் ஸ்ரீகலா பிள்ளை ஆகியோரும் இந்தப் பட்டியலில் இருந்தனர்.