கர்நாடகாவில் பெண் ஒருவர் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றிருந்தநிலையில், தனது சிறுநீரகத்தை விற்று அந்த கடனை அடைத்துள்ளார். இந்நிலையில், தனது மகள்களின் சிறுநீரகங்களையும் விற்க கட்டாயப்படுத்தப்படுவதாக காவல்நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்துள்ளார். இந்த சம்பவம் கேட்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பெங்களூரு , ராம்நகர் மாவட்டத்தில் உள்ள மாகடி நகரைச் சேர்ந்தவர் 46 வயதான பெண் கீதா. கீதாவின் கணவர், சில ஆண்டுகளுக்கு முன்பு, நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். கிட்டத்தட்ட 8 மாதங்கள் கடனுக்கான தவணை செலுத்தியநிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
கணவரின் இறப்பிற்கு பிறகு, அவர் வாங்கிய கடனை அடைப்பதிலும், தனது இரண்டு மகள்களை வளர்ப்பதிலும் மிகுந்த சிரமங்களை கையாண்டுள்ளார். இந்தநிலையில்தான், நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக மஞ்சண்ணா என்ற மஞ்சுநாத்தை கீதா உதவிக்காக அணுகி இருக்கிறார். அப்போதுதான், பிரச்னையே அதிகரித்துள்ளது.
இதுகுறித்து காவல்நிலையத்தில் கீதா அளித்துள்ள புகாரில், “கணவரின் இறப்பிற்கு பிறகு நான் பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டேன். எனது மகள்களை, படிக்கவைக்கவும், அவர்களுக்கான எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யவும் என்னால் முடியவில்லை. இந்தநேரத்தில்தான், மஞ்சுநாத் சிறுநீரகத்தை விற்றால் பணம் கிடைக்கும் என்ற யோசனையை கூறினார். ஒரு சிறுநீரகத்தை விற்றால், இன்னொரு சிறுநீரகத்தை கொண்டு உயிர்வாழ முடியும் என்று நம்பிக்கை கொடுத்தார் .
எனவே, இந்த இக்கட்டாண சூழலில், வேறு வழியில்லாமல், தயக்கத்துடன் அந்த யோசணைக்கு இணங்கினேன். சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூரு, யஷ்வந்த்பூரில் உள்ள மருத்துவமனைக்கு காரில் என்னை அழைத்து சென்றார். அங்கு எனக்கு சிறுநீரகம் அகற்றப்பட்டது. சிறுநீரகத்திற்கான பணம், 2.5 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது. ஆனால் அதில் ரூ.1.5 லட்சம் மட்டுமே மஞ்சுநாத் எனக்கு கொடுத்தார். அந்தப் பணத்தை வைத்து எனது கடனை அடைத்தேன்.
அத்துடன் எனது பிரச்னை தீர்ந்துவிடும் என்று நினைத்தேன். ஆனால், இல்லை. சில வாரங்களுக்கு பிறகு, கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி மஞ்சுநாத் என்னை தொல்லை செய்தார். என்னிடம் கத்த தொடங்கினார்.. பணத்தை கொடுக்கமுடியவில்லையெனில், எனது இரண்டு மகள்களின் சிறுநீரகத்தையும் விற்று தருமாறு கட்டாயப்படுத்தினார். ஆனால், நான் திட்டவட்டமாக மறுத்துவிட்டேன். “ என்று கூறீனார்.
இந்நிலையில், மாகடி போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோல, 52 வயதான மற்றொரு பெண் ஒருவரையும், மஞ்சுநாத் சிறுநீரகத்தை விற்குமாறு மிரட்டியதாகவும் அவர் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் ராம்நகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.