செய்தியாளர் - ராஜ்குமார்.ர
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் மாபெரும் இளைஞர் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தின்போது இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்தவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த். அப்போது, மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், தாக்குதல் நடத்தப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் வழக்கறிஞர் தெரிவித்தார். அதற்கு, “எங்களுக்கு வீடியோ பார்க்க நேரமில்லை” என தலைமை நீதிபதி கூறியிருந்தது பெரும் சர்ச்சையானது.
இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள NALSAR சட்டப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக தலைமை நீதிபதி சூர்ய காந்த் அழைக்கப்பட்டிருந்தார். பட்டம் பெறவிருந்த மாணவர்கள் பலரும் தலைமை நீதிபதியின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்ததோடு, அவர் கையால் பட்டம் பெற விருப்பமில்லை என பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியிருந்தனர். இதனைத் தொடர்ந்து, இந்திய பார் கவுன்சில் தலைவரும் பாஜக எம்.பி.யுமான மனன் குமார் மிஸ்ரா,NALSAR-ன் 2026-ம் ஆண்டு பட்டம் பெற்ற மாணவர்களை மாநில பார் கவுன்சில்கள் வழக்கறிஞர்களாகப் பதிவு செய்யக் கூடாது என மாநில பார் கவுன்சில்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். இது பெரும் சர்ச்சையான நிலையில், மாணவர்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர்.
இந்த வழக்கை உடனடியாக விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், அமைதியான முறையில் தங்களது கருத்தை தெரிவிக்கவும் எதிர்ப்பு தெரிவிக்கவும் மாணவர்களுக்கு உரிமை உள்ளது என்றும், இது எனக்கும் மாணவர்களுக்குமான விவகாரம். இதில் BCI ஏன் தலையிடுகிறது என்றும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் மாணவர்கள் மீது தண்டனை நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் BCI-யிடம் இந்த நடவடிக்கைக்கான காரணம் குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. இந்நிலையில், அந்தக் கடிதத்தைத் திரும்பப் பெற்ற மனன் குமார் மிஸ்ரா,“மாணவர்களுக்கு எதிராக செயல்படவில்லை. எனது வார்த்தைகளோ அல்லது கடிதமோ சட்டக்கல்லூரி மாணவர்களின் மனதைப் புண்படுத்தியிருந்தால், அதற்கு நான் மனப்பூர்வமாக வருந்துவதோடு, மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்” என மன்னிப்பு கோரியிருக்கிறார்.
ஏற்கனவே தலைமை நீதிபதி சூர்ய காந்த், வேலை இல்லாத இளைஞர்களை ‘கரப்பான் பூச்சிகள்’ எனத் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வேடிக்கையாக உருவான அமைப்பான ‘கரப்பான் பூச்சி ஜனதா தளம்’ தான், தர்மேந்திர பிரதான் பதவி விலகக் காரணமாக இருந்த டெல்லி போராட்டத்துக்கு விதை போட்டது. அதனால், மற்றுமொரு மாணவர் எழுச்சிக்கு வித்திடக் கூடாது என மத்திய அரசு கவனமாக இருப்பதாகவும், மாணவர் விவகாரங்களை கையாளுவதில் கவனமுடன் செயல்பட உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் அடிபடுகின்றன.