KFC-யில் கெட்டுப்போன சிக்கன்.?உணவுப்பாதுகாப்புத் துறை அதிரடி சோதனை.. கடைக்கு சீல்!!
கர்நாடகாவின் மங்களூருவில் உள்ள KFC உணவகத்தில், ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து வாங்கப்பட்ட சிக்கன், கெட்டுப்போய் துர்நாற்றம் வீசியதாகக் கூறி உணவு பாதுகாப்புத் துறைக்கு வாடிக்கையாளர் ஒருவர் புகாரளித்திருந்தார். இந்தக் புகாரின் அடிப்படையில், அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
உணவகத்தின் சமையலறை மற்றும் சேமிப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீண்ட நாட்களாகப் பாதுகாக்கப்பட்டு, தரம்கெட்ட நிலையில் இருந்த பழைய கோழி இறைச்சி மற்றும் உணவுப் பொருட்கள் அங்கு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட அந்த KFC கிளைக்கு உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மேலும், அந்த உணவகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட உணவுப்பொருள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, மைசூருவில் உள்ள மூன்று மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை (FDA) நடத்திய சோதனையில், சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்களை சேமித்து வைத்திருத்தல், காய்கறிகளில் பூஞ்சை வளர்ச்சி, சைவம் மற்றும் அசைவ உணவுப் பொருட்களை முறையாக தனித்தனியாகப் பிரித்து வைக்காதது உள்ளிட்ட பல்வேறு உணவுப் பாதுகாப்பு விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் தான், உணவுப் பொருட்களின் தரம் மற்றும் காலாவதி தேதியை முறையாகக் கண்காணிக்காமல் விதிமீறலில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
உணவுப் பாதுகாப்புத்துறையின் இந்த நடவடிக்கை மூலம், பெங்களூருவில் உள்ள பல ஆடம்பர ஹோட்டல்களும் தற்போது உணவுப் பாதுகாப்புத்துறையின் கண்காணிப்புக்குள் வந்துள்ளன.

