அயோத்தி ராமர் கோயில் நன்கொடைத் திருட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்ட எட்டுப் பேரில், ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தற்காலிகமாக பணத்தைக் கழிவறைகளில் மறைத்து வைத்ததாகத் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள அயோத்தி ராமர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட தொகையில் கோடிக்கணக்கான ரூபாய் காணாமல் போயுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு விவகாரத்தில் நாள்தோறும் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுதொடர்பாக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்புப் புலனாய்வுக் குழுவை ஒன்றை அமைத்துள்ள நிலையில், அக்குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக, 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே அந்தக் குழு, இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்குவதற்கு முன்பே, கோயில் நன்கொடைகளிலிருந்து திருடப்பட்டதாகக் கூறப்படும் 58 லட்சம் ரூபாய் அறக்கட்டளையால் மீட்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து, புலனாய்வுக் குழுவினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ராமர் கோயில் நன்கொடைத் திருட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்ட எட்டுப் பேரில், ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தற்காலிகமாக பணத்தைக் கழிவறைகளில் மறைத்து வைத்ததாகத் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட எட்டுப் பேரில், அவினாஷ் சுக்லாவும் ஒருவர். அவரிடம், போலீசார் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது, கோடிக்கணக்கான ரூபாய் திருடியதை அவர் ஒப்புக்கொண்டதுடன், அதுகுறித்து நடந்தவற்றைத் தெரிவித்துள்ளார். அவர் போலீசாரிடம் தெரிவித்த தகவலின்படி, ”வளாகத்திற்குள் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களின் இருப்பிடம் குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் நன்கு தெரிந்திருந்தது. ஆகையால், அதிலிருந்து தப்பிப்பதற்காக குளியல் மற்றும் கழிவறைகளில் பணத்தை மறைத்து வைத்தோம். பின்னர் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதை எடுத்தோம். அறக்கட்டளையுடன் தொடர்புடைய நபர்களுடன் தங்களுக்கு அதிக நெருக்கம் இருந்ததால், அவர்களுக்கு எங்கள் மீது பெரிய சந்தேகம் எழவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.