Arvind Kejriwal, PM Modi  x page
இந்தியா

'வீட்டிலிருந்தே பணி..’ பிரதமரின் வேண்டுகோளை விமர்சித்த அரவிந்த் கெஜ்ரிவால்!

இந்தியர்கள் தாய்நாட்டிற்காக தியாகங்கள் செய்யவும் சிரமங்களை சந்திக்கவும் தயாராக இருக்கிறார்கள். ஆனால், நாடு எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள நாட்டு மக்கள் ஆவலோடு உள்ளனர்.

Prakash J

” ‘வீட்டில் இருந்தே சேவை செய்யுங்கள், கல்வியை ஆன்லைனில் தொடருங்கள்’ என பிரதமர் மோடி பேசும் வார்த்தைக்குப் பின்னால் ஏதோ மர்மம் ஒளிந்துள்ளது” என ஆம் ஆத்மிகட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அச்சம் தெரிவித்துள்ளார்.

ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து உலக நாடுகளுக்குக் கிடைக்க வேண்டிய எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை காரணமாக இந்தியா கடும் நெருக்கடியைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது. அதனால், ’அத்தியாவசிய தேவைகளின்றி தனியார் நிறுவனப் பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணி செய்ய வேண்டும். அதேபோல், கல்வியை ஆன்லைன் மூலம் கற்பிக்க ஊக்குவிக்க வேண்டும்’ என பிரதமர் மோடி சமீபத்தில் பேசி இருந்தார். இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, ”1950-ஆம் ஆண்டு முதல் இந்தியா பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளோடு போர் மூண்டபோதுகூட இந்தியாவை வழிநடத்திய தலைவர்கள் இத்தகைய கடுமையான நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என பொதுமக்களை வலியுறுத்தியதில்லை. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி இப்போது இந்தக் கோரிக்கைகளை மக்கள் முன்னிலையில் வைப்பது ஈரான் - அமெரிக்க போர் மட்டும் காரணம் அல்ல. அதற்குப் பின்னால் ஏதோ மர்மம் இருக்கிறது. இந்தியாவின்பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது என்பதற்கான அறிகுறியே பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோள். இது எதிர்காலத்தில் மேலும் மோசம் அடையக் கூடும் என பிரதமர் அறிந்திருப்பதால் இந்தக் கோரிக்கைகளை மக்கள் முன்னிலையில் வைக்கிறார்.

இந்தியர்கள் தாய்நாட்டிற்காக தியாகங்கள் செய்யவும் சிரமங்களை சந்திக்கவும் தயாராக இருக்கிறார்கள். ஆனால், நாடு எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள நாட்டு மக்கள் ஆவலோடு உள்ளனர். எனவே நாட்டின் பொருளாதார நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். நாட்டின் நடுத்தர மக்களை மட்டும் செலவினங்களைக் குறைத்துக்கொள்ளச் சொல்லும் பிரதமர் நரேந்திர மோடி, ஏன் அவரது செலவினங்களையும் அல்லது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அவரது சகாக்களின் செலவினங்களையும் குறைத்துக் கொள்ள சொல்லவில்லை? பிரதமரும் மத்திய அமைச்சர்களும் தொடர்ந்து வெளிநாடு சென்றுகொண்டேஇருக்கிறார்கள். அதேபோல், பிரதமர் நரேந்திர மோடியின் பணக்கார நண்பர்கள் மத்தியில் ஏன் பிரதமர் நரேந்திர மோடி எந்தக் கோரிக்கையும் இதுவரை வைக்கவில்லை” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

இந்தியாவில் 69 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய், 45 நாட்களுக்குத் தேவையான சமையல் எரிவாயு கையிருப்பு உள்ளதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் இந்திய வர்த்தக கூட்டமைப்பு மாநாட்டில் பேசிய அவர், எந்த ஒரு மாநிலத்திலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என்றும் குறிப்பிட்டார். இதற்கிடையே, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற பிரதமர் மோடியின் வேணடுகோளை ஏற்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே மும்பையில் மெட்ரோ ரயிலில் பயணிக்கத் தொடங்கியுள்ளார். மேற்காசியப் போரால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க பிரதமர் கூறிய அறிவுரைகளைப் பின்பற்றுவதாக அமைச்சர் ராம்தாஸ் அதவாலே தெரிவித்தார். பிரதமரின் வேண்டுகோளை அனைத்து மக்களும் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாகவும் ராம்தாஸ் அதவாலே தெரிவித்துள்ளார்.