ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22, மதியம் 1:00 மணியளவில், ராணுவ சீருடை அணிந்த மூன்று பயங்கரவாதிகள் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். சுமார் 10 நிமிடங்கள் நீடித்த இந்த துப்பாக்கிச் சூட்டில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஒரு உள்ளூர் தொழிலாளி என மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகள்தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக இந்தியா அடையாளம் கண்டது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2025 மே 7 அன்று பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 11 ராணுவக் கட்டமைப்புகளை இந்திய ராணுவம் குறிவைத்து அழித்தது. தொடர்ந்து, மே-10 ஆம் தேதி இஸ்லாமாபாத்தின் கோரிக்கையின் அடிப்படையில் போர் நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் தணிந்திருக்கிறது. இந்தசூழலில் தான், சிந்தூர் நடவடிக்கையின் ஓராண்டு நிறைவு விழா அனுசரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும், இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானுக்கு கடுமையாக எச்சரிக்கைகளை விடுத்துள்ளார்.
ஆபரேசன் சிந்தூருக்கு வழிவகுத்ததைப் போன்ற சூழ்நிலைகல் மீண்டும் ஏற்பட்டால் இந்திய ராணுவம் எவ்வாறு செயல்படும் என்ற கேள்விக்கு உபேந்திர திவேதி பதிலளித்துப் பேசுகையில், பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து, இந்தியாவிற்கு எதிராகச் செயல்பட்டால், அவர்கள் வரைபடத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார்களா அல்லது வரலாற்றின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார்களா என்பதை முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.
இருப்பினும், பாகிஸ்தானுக்கு இந்தியா இதுபோன்ற எச்சரிக்கையை விடுப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், குஜராத்தில் உள்ள சிர் கிரீக் பிராந்தியத்தில் பாகிஸ்தான் அத்துமீறி நுழையத் துணிந்தால், பாகிஸ்தான் அதன் வரலாற்றையும் வரைபடத்தையும் மாற்றக்கூடிய ஒரு "கடுமையான பதிலடியை" எதிர்கொள்ளும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.