சுபாஷ் சந்திரா தொடர்பான திவால் வழக்கில், 22,006 கோடி ரூபாய் கடனுக்குப் பதிலாக 6.5 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தும் தீர்வை NCLT ஏற்றுக்கொண்டது. எஸல் குழும நிறுவனங்கள் கடனை திருப்பிச் செலுத்தாததால், வங்கிகள் வழங்கிய தொகையில் 99.97% வசூலிக்க முடியாமல் போகிறது. இதனால் வங்கிகளுக்கு சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடன் வழங்கிய அமைப்புகளில் 81% இந்தத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன.
இந்திய ஊடகத் துறையின் முன்னோடியும் ஜீ டிவி நிறுவனருமான சுபாஷ் சந்திரா, தனக்குள்ள 22 ஆயிரத்து 6 கோடி ரூபாய் கடனை அடைக்க முன்வைத்த 6.5 கோடி தீர்வுத் திட்டத்திற்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT) ஒப்புதல் அளித்துள்ளது.
சுபாஷ் சந்திரா தனது எஸல் குரூப் நிறுவனங்களுக்காகப் பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடன்களுக்குச் சுய உத்தரவாதம் வழங்கியிருந்தார். அந்நிறுவனங்களால் கடனைத் திரும்பச் செலுத்த முடியாததால், மொத்த நிலுவைத் தொகை 22 ஆயிரத்து 6 கோடி ரூபாயாக உயர்ந்தது. இதைத் தொடர்ந்து அவர் மீது தனிநபர் திவால் நடவடிக்கை பாய்ந்த நிலையில், மொத்தக் கடனுக்குத் தீர்வாக 6.5 கோடி ரூபாய் மட்டுமே தர முடியும் என அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்தச் சொற்பத் தொகையைக் கடன் தீர்வாக ஏற்று வழக்கை முடித்துக்கொள்ள என்சிஎல்டி அனுமதி வழங்கியுள்ளது. எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் போன்ற சில நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், கடன் வழங்கிய 81 சதவீத அமைப்புகள் சம்மதம் தெரிவித்ததால் இத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், சுபாஷ் சந்திராவின் நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கிய கடனில் 99.97 சதவீதத் தொகையைத் திரும்பப் பெற முடியாமல், வங்கிகளுக்கு 22 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.