இந்தியாவில் பொதுவாக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவே அரசு திட்டங்களை அறிவிக்கும். ஆனால், அதற்கு நேர்மாறாக ஆந்திரப் பிரதேசத்தில் கூடுதல் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு நிதியுதவி வழங்கும் அதிரடி அறிவிப்பை முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ளார். மாநிலத்தில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை சமன் செய்யவும், எதிர்காலத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவதைத் தடுக்கவும் இந்த அதிரடியான மக்கள் தொகை மேலாண்மைக் கொள்கை கொண்டு வரவுள்ளதாக அந்த அரசு தெரிவித்துள்ளது.
ஆந்திர அரசின் புதிய 'ஸ்வர்ணாந்திரா' தொலைநோக்குத் திட்டத்தின் கீழ், கூடுதல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தாயின் கணக்கில் நேரடியாகப் பணம் செலுத்தப்பட உள்ளது. ஒரு குடும்பத்தில் நான்காவது குழந்தை பிறக்கும் போது, தாயின் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ. 40,000 ஒருமுறை நிதியுதவியாக வழங்கப்படும். இதனுடன் NTR Baby Kit இலவசமாகத் தரப்படும். மூன்றாவது குழந்தையை பெற்றெடுக்கும் தம்பதிகளுக்கு ரூ. 30,000 நிதியுதவி வழங்கப்படும். வெறும் நிதியுதவியோடு மட்டுமில்லாமல், குழந்தைகளின் எதிர்காலப் பாதுகாப்பிற்காகப் பல்வேறு கூடுதல் சலுகைகளை வழங்கவும் ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. மூன்றாவது மற்றும் நான்காவது குழந்தைகளுக்கு 18 வயது ஆகும் வரை இலவசக் கல்வி வழங்க அரசு ஆலோசித்து வருகிறது.
இரண்டு குழந்தைகள் போதும் என்ற நிலையை மாற்றி, "மூன்று குழந்தைகள் சிறந்தது" என்ற புதிய முழக்கத்தை சந்திரபாபு நாயுடு முன்வைத்துள்ளார். கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதியன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, 'ஒவ்வொரு தம்பதியும் குறைந்தபட்சம் இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக் கொள்வதையும் வரவேற்கிறேன்,' என்று தெரிவித்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.