andhra capital amaravati web
இந்தியா

ஆந்திரா| 3 தலைநகருக்கு முற்றுப்புள்ளி.. ஒரே தலைநகர் ’அமராவதி’.. மசோதா நிறைவேற்றம்!

ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு மசோதா 2026 நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் நிறைவேறியிருக்கும் நிலையில், அமராவதி ஆந்திராவின் தலைநகராக சட்டப்பூர்வமாக உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

Premkumar S

ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு மசோதா 2026 இரு அவைகளிலும் நிறைவேறியதன் மூலம், 2024 ஜூன் 2 முதல் அமராவதி ஆந்திராவின் ஒரே தலைநகராக சட்டபூர்வமாக உறுதி செய்யப்பட்டது. 3 தலைநகரத் திட்டம் முழுமையாக கைவிடப்பட்ட நிலையில், 2015ல் தொடங்கிய அமராவதி தலைநகர் கனவு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது. இதை வரலாற்று தருணமாக சந்திரபாபு நாயுடு வர்ணித்து, மோடி, அமித் ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

50 ஆண்டுகால தனித் தெலுங்கானா போராட்டத்திற்குப் பிறகு, ஜூன் 2, 2014 ஆண்டு ஆந்திரப் பிரதேசத்திலிருந்து பிரிந்து இந்தியாவின் 29-வது மாநிலமாக தெலங்கானா உருவாகியது. அதுவரை ஆந்திராவின் தலைநகராக ஹைதராபாத் இருந்த நிலையில், பிரிவினையின் போது தெலங்கானாவின் தலைநகராக மாற்றப்பட்டது. ஆனாலும், 2024-ல் இருந்து அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆந்திராவின் தலைநகராக ஹைதரபாத் செயல்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஆந்திரா மற்றும் தெலங்கானா என இரு மாநிலங்களுக்கும் ஹைதராபாத் தலைநகராக செயல்பட்டு வந்தது.

ஹைதராபாத்

இந்த சூழலில் தான், 2015 ஆண்டு ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமராவதியை மாநிலத்தின் புதிய தலைநகராக அறிவித்ததுடன் அதற்கான கட்டமைப்பு பணிகளுக்கும் அதிகளவிலான முதலீடுகளைச் செய்தார். எனினும், 2019 முதல்வரான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திராவின் ஒரே தலைநகர் அமராவதி என்பதை விடுத்து, 3 தலைநகர் என்றத் திட்டத்தை அறிமுகப்படுத்த முயன்றார். அதன்படி, அமராவதி சட்டமன்றத் தலைநகராகவும், விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகராகவும், கர்நூல் நீதித்துறை தலைநகராகவும் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் ஜெகன்மோகனின் இந்தத் திட்டத்திற்கு பெரிய அளவிலான எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, 2021ஆம் ஆண்டு இத்திட்டம் மாநில அரசால் திரும்பப்பெறப்பட்டது.

தொடர்ந்து, 2024-ல் மீண்டும் ஆந்திராவின் முதல்வரான சந்திரபாபு நாயுடு, ஆந்திராவின் ஒரே தலைநகராக அமராவதி மட்டுமே இருக்கும் எனவும் 3 தலைநகரங்கள் என்ற விளையாட்டுக்கு இனி இடம் இருக்காது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி ஆந்திராவின் சட்டப்பேரவையில் மாநிலத்தின் ஒரே தலைநகராக அமராவதி இருக்கும் என்ற ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு மசோதா 2026 ஒருமனதாக நிறைவேறியது.

நாடாளுமன்றம்

இந்த மசோதா மத்தியரசின் ஒப்புதலுக்கு அனுப்பட்ட நிலையில், மாநில அரசின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த சூழலில் தான், நேற்று மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு மசோதா 2026 நிறைவேறியது. தொடர்ந்து, இன்று மாநிலங்களவையிலும், 2024 ஜூன் 2ம் தேதி முதல் அமராவதி தலைநகராக இருக்கும் என்று முன் தேதியிட்டு இந்த மசோதா நிறைவேறியிருக்கிறது. இதன்மூலம், ஆந்திராவின் தலைநகர் அமராவதி என்பது சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு மசோதா இருஅவைகளிலும் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆந்திரப் பிரதேசத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது. நமது மக்களின் ஒட்டுமொத்த விருப்பமும், லட்சியமும் தேசிய அளவில் எதிரொலித்துள்ளது. அமராவதியின் அந்தஸ்து இனி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. 2015 அக்டோபர் 22-ல் அமராவதிக்கு அடிக்கல் நாட்டியது முதல் 2025 மே 2-ல் அதன் வளர்ச்சியை மீண்டும் உறுதிப்படுத்தியது வரை, தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.