Akilesh criticized modi ANI
இந்தியா

பொதுத்தேர்தலில் வெற்றி; இடைத்தேர்தலில் தோல்வி.. வேண்டுமென்றே தோற்கும் பாஜக.. அகிலேஷ் விமர்சனம்!

மக்களை திசைதிருப்புவதற்காக மட்டுமே பாஜக இடைத்தேர்தலில் தோல்வியை தழுவுகிறது என்று உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் விமர்சித்துள்ளார்.

Praveen Joshva L

கடந்த 2014-ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. அதனைத் தொடர்ந்து 2019 மற்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் அக்கட்சி வென்று மூன்றாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது.

அதே போல 2014-ம் ஆண்டுக்கு முன்னர் சில மாநிலங்களில் மட்டுமே பாஜக ஆட்சியில் இருந்த நிலையில், தற்போது நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஆட்சியே நிலவுகிறது. இதனை குறிப்பிட்டு வாக்கு இயந்திரங்களில் மோசடி செய்தே பாஜக இதுபோன்ற தொடர் வெற்றிகளை பதிவு செய்வதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதனிடையே சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தின் ததியா சட்டமன்ற இடைத்தேர்தலிலும், பீகார் மாநிலம் பங்கிபூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவியது. அதிலும் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் 3 முறை வென்று ராஜினாமா செய்த பங்கிபூர் தொகுதியில் பாஜக தோல்வியை தழுவியது இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பிரச்சினை இல்லை என மக்களை திசைதிருப்புவதற்காக மட்டுமே இடைத்தேர்தலில் தோல்வியை தழுவுகிறது என்று உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் விமர்சித்துள்ளார்.

அகிலேஷ் யாதவ்

இது குறித்து பேசிய அவர், எந்த முறைகேடுகளும் இன்றி நேர்மையாக நடக்கும் தேர்தல்களில் நம்மால் வெல்ல முடியுமா என்று சோதித்து பார்க்கவே இந்த தேர்தலில் பாஜக களமிறங்கியது என்றும், அப்படி நடந்த தேர்தலில் அவர்கள் தோல்வியை தழுவினார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பாஜக கையாண்ட முறைகேடுகளை ததியா, பங்கிபூர் தொகுதியில் பாஜக பின்பற்றவில்லை என்றும் முறைகேடுகளால் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று மக்களை ஏமாற்றுவதற்காக இடைத்தேர்தலில் வேண்டும் என்றே பாஜக தோல்வியை தழுவுகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.