அசாதுதீன் ஓவைசி
அசாதுதீன் ஓவைசி File image
இந்தியா

மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு வாக்களிக்காதது ஏன்? அசாதுதீன் ஓவைசி எம்.பி விளக்கம்

Jayashree A

மக்களவையில் நேற்று முன்தினம் மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று மாநிலங்களவையிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா

மக்களவை போலவே, மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதமும் நடைப்பெற்றது. இரு விவாதங்களிலுமே பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், மகளிர் எம்.பிக்கள் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரித்து பேசினர்.

மாநிலங்களவையில் நேற்று விவாதம் நடந்து முடிந்த பிறகு மாநிலங்களவை தலைவரும் துணை குடியரசுத் தலைவருமான ஜெகதீப் தன்கர் முன்னிலையில் வாக்கெடுப்பானது நடைப்பெற்றது. அதில் அங்கிருந்த 215 உறுப்பினர்களும் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

பின் துணை குடியரசுத் தலைவரான ஜகதீப் தன்கர், “ஒருவர் கூட இதனை எதிர்த்து வாக்களிக்கவில்லை. இது வரலாற்று சிறப்புமிக்க ஒன்று. இதன் மூலம் மசோதா நிறைவேறுவதற்கு தேவையான 3 ல் 2 பங்கு ஆதரவுக்கு மேலாக மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது” என்றார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் தாக்கல்

முன்னதாக மக்களவையில் 454 - 2 என்ற வாக்குகளின் எண்ணிக்கையில் மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மக்களவையில் எதிர்ப்பு தெரிவித்த இருவர், இந்திய மஜ்லீஸ்-எ-இத்தஹாதுல் (ஏஐஎம் ஐ எம்) கட்சியின் அசாதுதீன் ஓவைசி மற்றும் இம்தியாஸ் ஜலீல் ஆகியோர். இவர்கள் வாக்களிக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து எம்.பி. அசாதுதீன் ஓவைசி விளக்கம் அளித்துள்ளார்.

அவர், “இந்த மசோதாவில் முஸ்லீம் மற்றும் ஓபிசி பெண்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. எங்கள் கட்சி முஸ்லிம் மற்றும் ஓபிசியினருக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் என்ற தகவல் நாட்டு மக்களுக்கு சென்று சேரவேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

அசாதுதீன் ஓவைசி

மேலும் “நம் நாட்டில் முஸ்லிம் பெண்கள் 7% பேர் உள்ளனர். ஓபிசியினர் 50% க்கு மேல் உள்ளபோது அவர்களுக்கு ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு மறுப்பது ஏன்?” என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்.