மம்தா பானர்ஜி x
இந்தியா

"வேட்புமனுக்களை நிராகரிக்கக்கூடும், எச்சரிக்கை!" - வேட்பாளர்களை அறிவுறுத்திய மம்தா.. காரணம் என்ன?

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவுறுத்தியுள்ளார்.

Premkumar S

தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி கடந்த மார்ச் மாதம் 15 அன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. 294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட இம்மாநிலத்தில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 291 இடங்களில் போட்டியிடவிருக்கிறது. தொடர்ச்சியாக 4-வது முறை வெற்றியைத் தக்க வைக்கும் நோக்கில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சின் தலைவருமான மம்தா பானர்ஜி மாநிலம் முழுவதும் சூறாவளிப் பரப்புரை செய்து வருகிறார்.

மம்தா பானர்ஜி

இந்த சூழலில் தான், தேர்தல் ஆணையத்தால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் வேட்புமனுக்களை நிராகரிக்க வாய்ப்புள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தின் பீர்பூம் மாவட்டம், நானூர் பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பேரணியில் மம்தா பானர்ஜி இன்று உரையாற்றும் போது தான் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் பேரணியில் பேசுகையில், வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும்போது ஒவ்வொரு சிறு விஷயத்திலும் கவனம் செலுத்துங்கள். சிறிய தவறு இருந்தாலும் புதிய அதிகாரிகள் உங்கள் மனுக்களை நிராகரிக்கக்கூடும்.

தேர்தல் ஆணையத்தால் புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு உங்கள் வேட்புமனுக்களை நிராகரிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து, தனது அரசியல் ஆதாயத்திற்காகப் பாஜக மத்திய அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும், தேர்தல் நடைமுறைகளில் தங்களுக்குச் சாதகமான அதிகாரிகளை நியமித்துள்ளதாகவும் மம்தா பானர்ஜி சாடியிருக்கிறார்.

தேர்தல் ஆணையம்

சமீபத்தில் மேற்கு வங்கத்தில் பல ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் அதிரடியாக இடமாற்றம் செய்தது. இந்தச் சூழலில், புதிய அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து மம்தா பானர்ஜி சந்தேகம் எழுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேட்புமனுக்களில் சொத்து விவரங்கள், குற்றப் பின்னணி மற்றும் இதர ஆவணங்களைச் சமர்ப்பிப்பதில் எவ்விதத் தவறும் நடக்கக்கூடாது என்பதில் திரிணாமுல் காங்கிரஸ் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறது.