மேற்கு வங்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு இடதுசாரிகளை வீழ்த்தி ஆட்சிக்கு வந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 15 ஆண்டுகளாக தொடர்ந்து அங்கு ஆட்சிசெய்து வந்தது. இப்படி அசைக்க முடியாத சக்தியாக இருந்த மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முதல்முறையாக நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவியது.
ஆனால் இந்த தோல்வி வெறும் தேர்தல் தோல்வியாக இல்லாமல் அந்த கட்சியின் அடித்தளத்தையே காலி செய்யும் அளவு உருமாறியுள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தலில் 80 எம்.எல்.ஏக்களோடு பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக திரிணாமுல் காங்கிரஸ் உருவாகியிருந்தாலும், அங்கு நடந்த ஃபால்டா சட்டப்பேரவை தொகுதி மறுதேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 4-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இது அந்த கட்சி ஒரே தேர்தலில் மக்களின் ஆதரவை இழந்ததையே வெளிப்படுத்துகிறது.
அதனைத் தொடர்ந்து அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் மம்தாவின் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அக்கட்சியின் இளம் தலைவர் ரிதாபிரதா (Ritabrata Banerjee) தலைமையில் 61 எம்.எல்.ஏக்கள் சபாநாயகரை சந்தித்த நிலையில், மம்தாவின் விருப்பத்துக்கு எதிராக ரிதாபிரதாவை எதிர்கட்சித் தலைவராக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
அதேபோல நாடாளுமன்றத்திலும் மம்தாவின் கட்சியைச் சேர்ந்த எம்.பிக்களில் 28 பேரில் 20 பேர் மம்தாவுக்கு எதிராக திரும்பியுள்ளனர். காக்கலி கோஷ் (Kakoli Ghosh), தஸ்திதார் (Kakoli Ghosh Dastidar) மற்றும் சதாப்தி ராய் (Satabdi Roy ) போன்ற மூத்த எம்பிக்கள் அடங்கிய இந்தக் குழு தங்களை தனி குழுவாக அங்கீகரிக்கவேண்டும் என நாடாளுமன்ற சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இந்த அதிருப்தியாளர்கள் தேர்தல் ஆணையத்தை அணுகி திரிணாமுல் காங்கிரஸின் சின்னத்திற்கும், கட்சியின் பெயருக்கும் உரிமை கோரவும் திட்டமிட்டுள்ளனர். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மம்தா பானர்ஜி கட்டுப்பாட்டில் இருந்து அதிருப்தியாளர்கள் கைகளுக்கு செல்லும் சூழலும் ஏற்பட்டுள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அது மம்தாவின் அரசியல் வாழ்க்கைக்கே முடிவுரை எழுதும் என பல்வேறு அரசியல் நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.