நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போதே எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் பலர் மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகின்றன. நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமின்றி, குழந்தைகளும்கூட மாரடைப்புக்குப் பலியாகி வருகின்றனர். அந்த வகையில், ராஜஸ்தானில் 9 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சிக்கரின் டான்டா நகரில் பிராச்சி குமாவத் என்ற 9 வயதுச் சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், வழக்கம்போலவே கடந்த 15ஆம் தேதி பள்ளிக்குச் சென்றுள்ளார். அன்று காலைமுதல் ஆரோக்கியமாக இருந்த சிறுமி, மதிய உணவு இடைவேளையின்போது உணவருந்த அமர்ந்துள்ளார். ஆனால், அவர் திடீரென மயக்கம்போட்டு விழுந்துள்ளார்.
இதைக் கேள்விப்பட்ட ஆசிரியர்கள் விரைந்துவந்து அருகில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை உயிர்ப்பிக்க மருத்துவர்கள் தங்களால் இயன்றவரை முயற்சி செய்தபோதும் அதில் எந்தவிதப் பலனும் இல்லை. பரிசோதனையின்போது அவருக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாகவே அவர் இறந்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவரைப் பரிசோதித்த மருத்துவர் சுபாஷ் வர்மா, “ஒரு நோயாளியை அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டால், மக்கள் உடனடியாக CPR கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு இது ஏற்படுவது அரிதான நிகழ்வு. சில நேரங்களில், இது பிறவி இதய நோயாகக்கூட இருக்கலாம். பெற்றோர்கள் அதை கவனிக்காமல் இருக்கலாம். அது விசாரிக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.