ஆந்திரப் பிரதேசத்தின் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி ஒடலரேவு பகுதியில் இருந்து மீன்பிடி படகில் கடலுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் அன்று காலை சுமார் 11 மணி வரை தங்கள் குடும்பத்தினருடன் தொலைபேசித் தொடர்பில் இருந்துள்ள நிலையில், அதன் பிறகு தொடர்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், மீனவர்கள் ஆகஸ்ட் 12-ஆம் தேதிக்குள் கரைக்குத் திரும்பிவிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், எதிர்பார்த்தபடி மீனவர்கள் கரை திரும்பவில்லை. இதையடுத்து, அம்மாநில முதல்வர்சந்திரபாபு நாயுடு நிலைமையை நேரில் கண்காணித்து, இவ்விவகாரத்திற்கு முன்னுரிமை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்தச்சூழலில் காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியில் கடற்படைக்கு சொந்தமான இரு கப்பல்கள், கடலோரக் காவல் படைக்கு சொந்தமான 5 கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் 300 கடல் மைல் தொலைவில் தேடுதல் பணிகள் நடைபெற்றது.
இந்தநிலையில் தான், நேற்று காலை சுமார் 11.45 மணியளவில், மேற்கு வங்கத்தின் சங்கர்பூர் மீன்பிடித் துறைமுகம் அருகே கொல்கத்தாவைச் சேர்ந்த மீன்பிடி படகு ஒன்று சென்று கொண்டிருந்தபோது, காணாமல் போன 7 மீனவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, அவர்களிடம் இருந்த செயற்கைக்கோள் தொலைபேசியை வைத்து மாநில அரசுக்கு காணமல் போன மீனவர்கள் தகவல் தெரிவித்த நிலையில், தற்போது 7 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள கப்பலில் இருந்த 7 மீனவர்களில் ஒருவரும் படகின் உரிமையாளருமான ராமகிருஷ்ண வர்மா, ஆகஸ்ட் 4-ம் தேதி படகின் கிளட்ச் பிளேட்டில் கோளாறு ஏற்பட்டது எனவும் அதைச் சரிசெய்தபோதிலும், என்ஜின் கியர்பாக்ஸும் (Engine Gearbox) செயலிழந்துவிட்டதை தாங்கள் உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, "பலத்த காற்று கப்பலை மேற்கு வங்க கடற்கரையை நோக்கி நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் தள்ளியதால், அவர்ல: பல நாட்களாக உதவியற்ற நிலையில் தத்தளித்ததாக தெரிவித்திருக்கிறார்.
அதேபோல, 15 நாட்களுக்குப் போதுமான உணவுப் பொருட்களை எடுத்துச் சென்றிருந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே உணவை அனைவரும் பங்கிட்டுச் சாப்பிட்டாதாகவும் ராமகிருஷ்ண வர்மா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள ஆந்திர மீன்வளத்துறை அமைச்சர் அட்சன்நாயுடு, மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மருத்துவப் பரிசோதனைகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது எனவும் தெரிவித்திருக்கிறார். அதேசமயம், வெள்ளிக்கிழமைக்கு சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என கூறியுள்ளார்.
இவ்வாறு, 3 வாரங்களுக்குப் பின் கடலில் காணாமல் போனர்வர்கள் பத்திரமாக மீட்கப்பட்டிருப்பது அவர்களின் குடும்பத்தினரிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.