lorry set fire pt desk
இந்தியா

தெலங்கானா | பைக், ஆட்டோ மீது மோதிய லாரி... 3 வயது குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்த சோகம்!

தெலங்கானாவில் மோட்டார் சைக்கிள், ஆட்டோ மீது அடுத்தடுத்து லாரி மோதிய விபத்தில், மூன்று வயது குழந்தை உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரியை உடைத்து தீ வைத்து எரித்தனர்.

webteam

தெலங்கானா மாநில மகபூப் நகர் மாவட்டத்திலுள்ள பாலா நகர் பகுதியில் நேற்றிரவு வேகமாக சென்ற லாரி ஒன்று அங்கிருந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றின் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிள், ஆட்டோ ஆகிய இரண்டு வாகனங்களிலும் பயணித்த மூன்று வயது குழந்தை உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

Road accident

லாரி டிரைவர் வேகமாக லாரியை ஓட்டி சென்றதால்தான் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே லாரி டிரைவர் மீது கடும் கோபமடைந்த பொதுமக்கள் டிரைவரை மடக்கிப் பிடித்து கடுமையாக தாக்கியதோடு லாரியை உடைத்து தீ வைத்து எரித்தனர். தகவல் அறிந்து போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் அங்கு வந்தனர். ஆனால், ‘அருகில் வந்தால் தீயணைப்பு வாகனத்திற்கும் இதே கதிதான் ஏற்படும்’ என்று கூறி எரிந்து கொண்டிருந்த லாரியை காண்பித்து மிரட்டி தீயணைப்பு வாகனத்தை திருப்பி அனுப்பினர் அங்கிருந்த சிலர்.

விபத்தில் படுகாயம் அடைந்த உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபரை போலீசார் மீட்டு மாதாபூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் பிடியில் இருந்த லாரி டிரைவரை மீட்ட போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.