மீட்கப்பட்ட மாணவரின் உடல்
மீட்கப்பட்ட மாணவரின் உடல் புதியதலைமுறை
இந்தியா

சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்... கடலில் மாயமான 4 பேரின் உடல் மீட்பு!

யுவபுருஷ்

செய்தியாளர் - உதயகுமார்

ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதியை சேர்ந்த கலைக்கல்லூரி மாணவர்கள் 18 பேர் மற்றும் சித்தூர் மாவட்டம் நலகாம்பள்ளியை சேர்ந்த கலைக்கல்லூரி மாணவர்கள் 22 பேர் என இருவேறு குழுக்களை சேர்ந்த 40 மாணவர்கள் மாமல்லபுரத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் சுற்றுலா சென்றுள்ளனர்.

அனைத்து புராதன சின்னங்கங்களையும் சுற்றி பார்த்த கல்லூரி மாணவர்கள், பின் கடற்கரைக்கு சென்றனர். அப்போது இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கடலில் இறங்கி குளித்தனர். அந்த நேரத்தில் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் சுமார் 10 மாணவர்களை ராட்சத அலை கடலுக்கு இழுத்து சென்றது.

இதைக்கண்டு கரையில் இருந்த சக மாணவர்கள், தங்கள் நண்பர்களை காப்பாற்ற கோரி கூச்சல் போடவே, கடற்கரையில் புகைப்படம் எடுக்கும் பணியில் இருந்த மீனவர்கள் மணிமாறன், ராஜி, விஜி, சதீஷ் ஆகியோர் கடலில் சர்பிங் பலகையின் உதவியுடன் நீந்தி சென்று கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய 5 மாணவர்களை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். இவர்களன்றி நலகாம்பள்ளியை சேர்ந்த விஜய் (24) என்ற மாணவர் கடல் நீரில் மூச்சுத் திணறி உயிரிழந்தார். அவரது உடல் மட்டும் சிறிது நேரத்தில் கரை ஒதுங்கியது.

மாயமான அனந்தபூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பெத்துராஜ் (26), ஷேசாரெட்டி (25), நலகாம்பள்ளியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மவுனீஷ் (18), பார்த்துஷா (19) ஆகிய 4 மாணவர்களை போலீசார், செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்பு துறையினர் மற்றும் சென்னை மெரினா மீட்பு குழு உதவியுடன் கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக தேடி வந்தனர்.

நேற்று கண்டறிந்த நிலையில், மாயமான நான்கு மாணவர்களின் உடல்களையும் மெரினா மீட்பு குழு உதவியுடன் தீயணைப்புத் துறையினர் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் கடலில் குளித்தபோது, அலையில் இழுத்துச்செல்லப்பட்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.