2029 மக்களவைத் தேர்தலிலும் அதற்குப் பிறகு நடத்தப்படவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு அதாவது 33% விழுக்காடு இடங்களை ஒதுக்குவதற்கான இரண்டு மசோதாக்களை நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுவருகிறது. 33% மகளிர் இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தும்போது ஆண்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய தொகுதி மறுவரையரை செய்து, மக்களவையின் மொத்த இடங்களை 50 விழுக்காடு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது உள்ள 543இலிருந்து 816ஆக அதிகரிக்கப்படும். இதில் பெண்களுக்கு 269 அல்லது 270 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். அதாவது மக்களவையில் குறைந்தபட்சமாக 269 பெண் எம்பிக்கள் இடம்பெற்றாக வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் மக்களவை தொகுதி எண்ணிக்கை சமமாக 50 விழுக்காடு அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையரை செய்யப்படும்போது மக்கள்தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்கள் பிரதிநிதித்துவம் குறையும் என்ற கவலை தவிர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.
மாநிலங்களின் மக்களவைத் தொகுதி எண்ணிக்கை 50 விழுக்காடு அதிகரிக்கும்போது தமிழ்நாட்டில் இப்போதுள்ள 39 தொகுதிகள் 58 அல்லது 59 ஆக அதிகரிக்கும். இதில் 19 அல்லது 20 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். கேரளாவிற்கு தற்போதுள்ள 20 இடங்கள் 30ஆக உயரும், அதில் 10 இடங்கள் பெண்களுக்குக் கிடைக்கும். அதேபோல், கர்நாடகாவின் மக்களவை இடங்கள் 28இலிருந்து 42ஆகவும் ஆந்திராவின் இடங்கள் 25இலிருந்து 38ஆகவும், தெலுங்கானாவின் இடங்கள் 17இலிருந்து 26ஆகவும் அதிகரிக்கும். இந்த மாநிலங்களுக்கு பெண்களுக்கு முறையே 14, 13 மற்றும் 9 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.
நாட்டிலேயே மிக அதிக இடங்களைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தின் மக்களவை பிரதிநிதித்துவம் 80இலிருந்து 120ஆக உயரும்; இதில் பெண்களுக்கு மட்டும் 40 இடங்கள் ஒதுக்கப்படும். மகாராஷ்டிராவின் இடங்கள் 48இலிருந்து 72ஆக உயரும். மகாராஷ்டிர பெண்கள் 24 பேர் மக்களவைக்குச் சென்றாக வேண்டும், பிஹாரின் இடங்கள் 40இலிருந்து 60ஆக உயரும். பிஹாரிலிருந்து 20 பெண்கள் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.