petrol diesel price hike web
இந்தியா

10 நாட்களில் 3 முறை | எரிபொருள் விலையை உயர்த்திய மத்திய அரசு.. இன்னும் எவ்வளவு உயரும்?

மேற்கு ஆசிய பதற்றம், ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகள் காரணமாக பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் தொடரும் எனச் சொல்லப்படுகிறது.

PT WEB

மே 15-ஆம் தேதி முதல், மேற்கு ஆசிய மோதலின் காரணமாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. மே 15ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.14 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 3.11 ரூபாயும் உயர்த்தப்பட்டது. அடுத்து மே 19 அன்று பெட்ரோல் 87 காசுகளும், டீசல் விலை 91 காசுகளும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இன்று பெட்ரோல் விலை 87 பைசாவும், டீசல் விலை 91 பைசாவும் உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 105.31 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 96.98 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Petrol

இது 10 நாட்களுக்கும் குறைவான காலத்தில் நிகழ்ந்த மூன்றாவது விலை உயர்வாகும். மொத்தத்தில், விலைகள் லிட்டருக்கு ஏறக்குறைய ரூ.5 வரை உயர்ந்துள்ளது.

மேலும் விலை உயரும்

தற்போதைய விலை உயர்வு மட்டும், எண்ணெய் விற்பனை நிறுவனங்களின் இழப்புகளை முழுமையாக ஈடுசெய்யப் போதுமானதாக இருக்காது என்பதால், மேலும் பலமுறை விலை உயரக் கூடும். குறுகிய காலத்திலேயே பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.10 வரை உயரக்கூடும். இந்த உயர்வு ஒரேகட்டமாகவோ அல்லது 2 முதல் 3 வாரங்களில் படிப்படியாகவோ உயரக்கூடும் எனச் சொல்லப்படுகிறது.

crude oil

விலை உயர்வுக்கான காரணம்

அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையிலும் 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் ஒரு பீப்பாய்க்கு $120-க்கும் அதிகமாக உயர்ந்தன. பின்னர், விலைகள் சற்றுக் குறைந்து ஒரு பீப்பாய்க்கு சுமார் $100 முதல் $105 என்ற அளவில் நிலைபெற்றுள்ளது. இதன் விளைவாக, இந்த காலாண்டில் எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் ரூ. 570 முதல் ரூ.580 பில்லியன் வரையிலான இழப்புகளைச் சந்திக்கும் என்றும் கூறியிருந்தது. இந்த இழப்புகளைச் சரிசெய்ய எண்ணெய் நிறுவனங்கள் விலையை அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது.