எட்டு வயது சிறுவனுக்கு ஏற்பட்ட நீரிழிவு நோயின் வகையை மரபணு பரிசோதனையின் மூலம் கண்டறிந்து, அவனது உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்கள் மருத்துவர்கள்.
அகமதாபாத்தை சேர்ந்த சிறுவன் ரிஷப் மோடிக்கு ரத்த சக்கரை அளவு 500ஐத் தொட்டிருந்தது. சர்க்கரைக் கட்டுப் பாட்டு அளவைக் குறிக்கும் HbA1c 10% ஆக இருந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையை அடைந்திருந்த ரிஷபுக்கு, வாழ்நாள் முழுவதும் இன்சுலின் சிகிச்சை தேவைப்படும் முதல் வகை நீரிழிவு நோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். ஆனால் வாரம் நான்கு முறை இன்சுலின் ஊசி செலுத்திக்கொண்ட பிறகும் ரிஷபின் சர்க்கரை அளவு குறையவில்லை.
இதைத் தொடர்ந்து ரிஷப்பின் குடும்பப் பின்னணி குறித்து விசாரித்த மருத்துவர்கள், அவரது தாய்க்கு 30 வயது முதலே நீரிழிவுக்கு சிகிச்சை பெறுவதையும், தாய்வழிப் பாட்டிக்கும் நீரிழிவு நோய் இருப்பதையும் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ரிஷப். பரிசோதித்த மருத்துவர் அவருக்கு கணையத்தில் போதுமான அளவு இன்சுலின் சுரப்பதைக் கண்டுபிடித்தார்.
முதல்வகை நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு இவ்வாறு இருக்க சாத்தியமே இல்லை. எனவே மரபணு சோதனை செய்து பார்த்த மருத்துவர், ரிஷபுக்கு Maturity onset diabetes of the young (Mody) என்னும் அரிய வகை நீரிழிவு இருப்பதைக் கண்டறிந்தார். வயது அதிகரிக்கும்போது மரபணுவில் ஏற்படும் உருமாற்றத்தால் 25 வயதுக்குள் இருப்பவர்களுக்கு ஏற்படும் நோய் இது.
இதையடுத்து ரிஷப்புக்கு இன்சுலின் சுரப்பை அதிகரிப்பதற்கான மருந்துகளைக் கொடுத்தார். இதையடுத்து ரிஷப்பின் HbA1c அளவு 7.2%ஆகக் குறைந்தது. சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ரிஷப் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்கள் மருத்துவர்கள்.
ஆனால், இத்தகைய மரபணு சோதனைக்கு மட்டுமே ரூ.12,000 செலவாகும் என்பதால், ஏழைகளுக்கு இச்சிகிச்சை முறை எட்டாக்கனியாகவே இருக்கிறது. எனவே, ஏழை, நடுத்தர மக்களும் இதுபோன்ற மருத்துவ பரிசோ தனைகளால் பயனடைவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.