உடல் எடையைக் குறைப்பதற்கும், தசைப் பிடிப்புக்கும் மட்டுமே தசைப் பயிற்சிகள் உதவும் என்ற பொதுவான நம்பிக்கையை உடைக்கும் விதமாக புதிய ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. வாரத்துக்கு ஒன்று முதல் இரண்டு மணி நேரம் தசைப் பயிற்சி மேற்கொள்வது, மனிதர்களின் ஆயுட்காலத்தை கணிசமாக அதிகரிக்கும் என்று அமெரிக்காவில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேரிடம் 30 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
இவ்வாறு தசைப் பயிற்சி செய்பவர்களுக்கு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவற்றால் ஏற்படும் மரண ஆபத்து 19 சதவீதமும், டிமென்ஷியா <<Dementia>> எனப்படும் ஞாபக மறதி போன்ற நரம்பியல் நோய்களால் ஏற்படும் மரண ஆபத்து 27 சதவீதமும் குறைவதாக இந்த ஆய்வு கூறுகிறது. நமது தசைகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதோடு, உடலின் வீக்கத்தைக் குறைக்கும் ஹார்மோன்களையும் சுரக்கின்றன.
இதனால், தசைப் பயிற்சியுடன் நடைப்பயிற்சி, நீச்சல் போன்ற ஏரோபிக் பயிற்சிகளையும் சேர்த்துச் செய்யும்போது, முன்கூட்டியே ஏற்படும் மரண ஆபத்து 45 சதவீதம் வரை குறைகிறது. நீண்ட ஆயுளுடன் வாழ உடற்பயிற்சி நிலையத்துக்குச் சென்றுதான் கடினமாக உழைக்க வேண்டும் என்பதில்லை; வாரத்துக்கு இரண்டு முறை எளிய தசைப் பயிற்சிகளை மேற்கொண்டாலே ஆரோக்கியமாக வாழலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.