புனே அகார்கர் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள், மனித முடியை விட மெலிதான நானோ துகள்களை உருவாக்கி மார்பகப் புற்றுநோய் சிகிச்சையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். MUC1 புரதத்தை அடையாளம் கண்டு புற்று செல்களை அழிக்கும் இந்த துகள்கள், ஆரோக்கியமான செல்களை காக்கும் திறன் கொண்டவை. எலிகளில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டாலும், மனிதர்களுக்கு பயன்பட இன்னும் சில ஆண்டுகள் ஆராய்ச்சி அவசியம் என கூறப்படுகிறது.
மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான சிகிச்சையில் இந்திய விஞ்ஞானிகள் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர். புனேவில் உள்ள அகார்கர் (Agharkar) ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மனித முடியை விட பல்லாயிரம் மடங்கு மெலிதான 'நானோ துகள்களை' ((Nanoparticles)) உருவாக்கியுள்ளனர்.
இந்த நுண் துகள்கள், புற்றுநோய் செல்களைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டவை. மார்பகப் புற்றுநோய் செல்களில் மட்டுமே காணப்படும் 'MUC1' என்ற புரதத்தைக் கண்டறிந்து அழிக்கும் வகையில் இந்த நானோ துகள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால், வழக்கமான கீமோதெரபி (Chemotheraphy) சிகிச்சையைப் போலன்றி, உடலில் உள்ள ஆரோக்கியமான செல்கள் எவ்வித பாதிப்புமின்றி காக்கப்படுகின்றன.
எலிகளில் நடத்தப்பட்ட ஆய்வகச் சோதனையில், இது புற்றுநோய் கட்டிகளை வியத்தகு முறையில் சுருக்கியது கண்டறியப்பட்டுள்ளது. 'அட்வான்ஸ்டு ஹெல்த்கேர் மெட்டீரியல்ஸ்' (Advanced Healthcare Materials) இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு, எதிர்காலப் புற்றுநோய் சிகிச்சையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தற்போதைக்கு ஆரம்பக்கட்ட ஆய்விலேயே உள்ளது மனித பயன்பாட்டிற்கு வருவதற்கு இன்னும் சில ஆண்டுகள் விரிவான ஆய்வுகளும் சோதனைகளும் தேவைப்படலாம் என்ற சிறிய எச்சரிக்கையையும் ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கின்றனர்,