தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விடைபெற்றாலும், பனிக்காலத்தின் சில்லென்ற தட்பவெப்பநிலை ஒரு பக்கம் இதமாக இருந்தாலும், மறுபக்கம் காய்ச்சல் மற்றும் சளி தொல்லைகளை கொடுத்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், குழந்தைகள் மற்றும் முதியோருக்கு, காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, உடல் வலியுடன் கூடிய பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
சாதாரணச் சளிதானே என்று அலட்சியப்படுத்த முடியாத அளவிற்கு, ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் இந்த காய்ச்சல் குறித்து, பொது சுகாதாரத்துறை இப்போது ஒரு முக்கியமான ஆய்வில் இறங்கியுள்ளது. எந்த வகையான வைரஸ் தற்போது, அதிக அளவில் பரவி வருகிறது, அந்த வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளதா என்பதைக் கண்டறியும் ஆய்வை, பொது சுகாதாரத் துறை முன்னெடுத்துள்ளது. பெரும்பாலானவர்களுக்கு ஒரு வாரத்திற்குள்ளேயே காய்ச்சல், சளி குணமடைவதால் அச்சப்பட வேண்டிய தேவையில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் வைரஸ் குறித்து அறிய, பாதிக்கப்பட்டவர்களின் சளி மாதிரிகளை, தோராயமாக சேகரித்து, அதனை பகுப்பாய்வுக்கு உட்படுத்த உள்ளதாக கூறியுள்ளனர்.