ஜிபிஎஸ் முகநூல்
ஹெல்த்

190 ஐ தாண்டிய GBS பாதிப்பு! அச்சத்தில் புனே மக்கள்!

புனேவில் GBS நோயால் 192 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

புனேவில் சமீப காலமாக GBS நோயின் தாக்கம் அதிகரித்து வருவதை அன்றாடம் செய்திகளில் காணமுடிகிறது. இந்தவகையில், புனேவில் 37 வயது நபர் ஒருவர் GBS ஆல் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புனேவில் உள்ள பிப்வேவாடியை சேர்ந்தவர் GBS ஆல் இறந்த 37 வயது நபர் .இவர் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஜனவரி 31 ஆம் தேதி அன்று, இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனால், முதலில் புனேவில் உள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், பின்னர் கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார் . இருப்பினும், உடல்நலனில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தநிலையில்தான், சிகிச்சை பலனின்றி ஞாயிறு இரவு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், GBS குறித்தான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது புனேவின் பொது சுகாதாரத்துறை ;

” GBS நோயால் 192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயிரிழந்துள்ளது. மேலும், 6 பேருக்கு GBS தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளது.

GBS (Guillain Barre Syndrome) 

பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றின்போது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி தவறுதலாக நரம்புகளை தாக்குவதால் ஏற்படும் அரியவகை பாதிப்புதான் இந்த Guillain Barre Syndrome எனப்படும் GBS. 

அறிகுறிகள்:

GBS எனப்படும் இந்த பாதிப்பு, திடீர் உணர்வின்மை மற்றும் தசை பலவீனத்தை ஏற்படுத்துகிறது. மேலும் மூட்டுகளில் கடுமையான பலவீனம், தளர்வான அசைவுகள் போன்ற அறிகுறிகளும் தெரியக்கூடும்.

GBS ஏற்பட காரணம் என்ன?

சாதாரண பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளால் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனப்படுவதே, GBS ஏற்பட காரணமாகிறது என்கின்றனர் மருத்துவர்கள். இருப்பினும் அதிகாரிகள், அசுத்தமான நீரால் இந்த பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை அறிய, புனேவின் பிரதான குடிநீர் ஆதாயமான கடக்ஸ்வஸ்லா (Khadakwasla) அணையில் சோதனை செய்து வருகின்றனர். இது குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை பலரையும் பாதிக்கிறது என்றபோதிலும், பெருந்தொற்றாக மாறும் அளவும் அச்சப்பட வேண்டியதில்லை என்பது மருத்துவர்கள் சொல்லும் விஷயமாக உள்ளது. பெரும்பாலான நோயாளிகள், உரிய சிகிச்சைக்குப்பின் மீண்டுவிடுவர் என்றும் சொல்லப்படுகிறது.