Analogue Paneer AI
ஹெல்த்

அனலாக் பனீர் எனும்ஆபத்து.. எச்சரிக்கும் உணவுப் பாதுகாப்புத் துறை!!

பால் பொருளாக அல்லாமல் செயற்கை முறையில் தயாரிக்கப்படும் அனலாக் பனீர் ஆரோக்கியமானதல்ல என உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

PT WEB

உணவகங்களில் ஆசையாக வாங்கிச் சாப்பிடும் பனீர், நமது ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் அனலாக் பனீராகவும் இருக்கலாம். அண்மையில் சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநில அரசுகள் அனலாக் பனீர் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு அதிரடியாக தடை விதித்துள்ளன. அனலாக் பனீரை அசலான பனீர் என்று கூறி விற்றால் 6 மாதம் முதல் ஆயுள் தண்டனை வரை சிறையும், 10 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என மகாராஷ்டிரா அரசு எச்சரித்துள்ளது.

அனலாக் பனீர்

பொதுவாக பாரம்பரிய பனீர் என்பது பாலைத் திரித்து தயாரிக்கப்படும் பால் பொருளாகும். அனலாக் பனீர் என்பது பாலுக்குப் பதிலாகத் தாவர எண்ணெய்கள், காய்கறி கொழுப்புகள், பால் பவுடர் சேர்த்து செயற்கையாக உருவாக்கப்படும் மாற்றுப் பொருளாகும். பால் பனீரை விட இதனை மலிவான விலையில் தயாரிக்க முடியும். அதிக நாட்களுக்குக் கெட்டுப்போகாமல் இருக்கும். ஆனால் புரதம், உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்புச் சத்துக்கள் மிகவும் குறைவு. உண்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க, உணவகங்கள் தங்கள் மெனு கார்டில் அனலாக் பனீர் பயன்படுத்துவதைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

அயோடின் டெஸ்ட் மூலம் அசல் பனீர்தானா என்பதைக் கண்டறியலாம். பனீர் துண்டை நீரில் கொதிக்க வைத்து, ஆறவைத்து அதில் 2 முதல் 3 துளிகள் அயோடின் கரைசலை ஊற்றும்போது நீலம் அல்லது கருப்பு நிறமாக மாறினால், அது செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட 'அனலாக் பனீர்' என்பதை உறுதி செய்துகொள்ளலாம்.