சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் அதிக எண்ணிக்கையிலான புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதுகுறித்த தகவல்கள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் மக்களவையில் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசியப் புற்றுநோய் பதிவேட்டுத் திட்டத்தின் மதிப்பீடுகளின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பதிவான புதிய புற்றுநோய் பாதிப்புகளின் விவரம் மற்றும் ஒட்டுமொத்த இந்திய பாதிப்பு நிலை பற்றி பார்க்கலாம்.
2022 ஆம் ஆண்டில் இந்திய அளவில் 14,61,427 புற்றுநோய் பாதிப்புகள் பதிவான நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 93,536 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. 2023 ஆம் ஆண்டில் இந்திய அளவில் 14,96,972 ஆகவும் தமிழ்நாட்டில் மட்டும் 95,944 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. 2024 ஆம் ஆண்டில் இந்திய அளவில் 15,33,055 ஆக இருந்த புற்று நோய் பாதிப்பு, தமிழ்நாட்டில் 98,386 ஆக இருந்திருக்கிறது. அதன்படி, தமிழ்நாடு 2024 ஆம் ஆண்டில் சுமார் 98,386 புதிய பாதிப்புகளுடன், நாட்டில் அதிக பாதிப்புகளைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.
புற்றுநோய் பாதிப்புகள் அதிகரிப்பதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், சில முக்கிய காரணங்களை அடையாளம் கண்டுள்ளது. அதன்படி, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், புகையிலை மற்றும் மது அருந்துதல், போதுமான உடல் செயல்பாடுகள் இல்லாதது, அதிக அளவிலான கொழுப்பை உணவில் சேர்த்துக் கொள்ளுதல், போன்றவற்றை காரணமாக கூறுகிறது.
புற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான திட்டங்கள் மத்திய அரசு, தேசியத் திட்டம் மூலம் நாடு முழுவதும், குறிப்பாகக் கிராமப்புறங்களில், புற்றுநோய் சிகிச்சை மற்றும் தடுப்பு வசதிகளை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
தேசிய தொற்றுநோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் , மாநில புற்றுநோய் நிறுவனங்கள் மற்றும் மூன்றாம் நிலைப் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்க மாநிலங்களுக்கு ஆதரவு வழங்கப்படுகிறது.
தேசிய தொற்றுநோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் நாடு முழுவதும் 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு உலகளாவிய ஸ்கிரீனிங் செய்வதற்கான பிரச்சாரத்தை சுகாதார அமைச்சகம் மேற்கொண்டது.