கல்லூரியில் படித்தவுடன் ஏன் சரியான வேலை கிடைப்பதில்லை? என்பதை பாகம் ஒன்றில் பார்த்தோம். இன்று இன்டர்வியூவில் வெற்றி அடைய முக்கிய காரணியாக இருக்கும் ரெஸ்யூமேவை பற்றிப் பார்ப்போம்.
கையெழுத்து அழகாக இருந்தால் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்கிற காலம் போய், ரெஷ்யூம் நன்றாக இருந்தால் மட்டுமே வேலை கிடைக்கும் என்கிற காலத்திற்கு வந்துள்ளோம். மாறி வரும் சூழ்நிலையில் தொழில் நிறுவனங்கள் கல்வித் தகுதியை மட்டுமல்ல வேறு பல திறமைகளை நம்மிடம் எதிர்பார்க்கின்றன. அவர்கள் எதிர்பார்க்கும் திறமைகளை எப்படி அவர்களிடம் வெளிப்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். அந்த வகையில், நமது திறமைகளை வெளிப்படுத்த முதல் காரணமாக அமைவது ரெஷ்யூம் மட்டுமே. அதில் சில தவறுகளினால், வேலை வாய்ப்பையும் இழக்க நேரிடுகிறது. ரெஷ்யூம் எப்படி இருக்க வேண்டும், அதில் என்ன என்ன தவறுகள் செய்யக் கூடாது?
1. ரெஷ்யூமை நல்ல தரமான ஏ4 சைஸ் பேப்பரில் பிரிண்ட் செய்வது நல்லது.
2. ஒரு வரி எழுதியிருந்தாலும், அதில் முழுத் தகவல் இருந்தால் போதுமானது. அதிக வரிகளும், வரலாறுகளும் இருந்தால், அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.
3. கல்லூரியில் செய்திருக்கும் பிராஜெக்ட்டின் தலைப்பை எழுதியிருக்க வேண்டும். அதுமட்டும் இல்லாமல், பிராஜெக்ட் குழுவில் உங்களின் பங்களிப்பை பற்றியும் ஒரு வரியில் இருக்க வேண்டும்.
4. விண்ணப்பித்திருக்கும் பதவிக்கு சம்பந்தமான திறமைகள் இருந்தால் கொடுக்கவேண்டும்.
5. ஒரு வேளை, ஏற்கனவே வேறு நிறுவனத்தில் வேலை செய்தவர்களாக இருந்தால், “நான் அந்த நிறுவனத்தின் பிராஜெக்ட்டிற்காக மிகவும் கஷ்டப்பட்டேன், ஆனால் எனக்கு எதுவும் செய்யவில்லை” என்று ரெஷ்யூமில் தயவுசெய்து போட வேண்டாம். அதன் மூலம் உங்களைப் பற்றி தவறாக நினைக்கத் தோன்றும்.
6. குடும்ப சூழ்நிலைகளையும், உடல்நலப் பிரச்சனைகளைப் பற்றியும் கொடுக்கக் கூடாது. ஒருவேளை உடல் நலக் குறைபாடு காரணமாக, ஏற்கனவே வேலை செய்த நிறுவனத்தில் இருந்து விலகியிருந்தால், நேர்காணலில் மட்டும் தெரிவிக்கலாம்.
7. ரெஷ்யூமில் எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகள் இருந்தால் கவனமற்றவர் என்று நினைத்துக் கொள்வார்கள். முடிந்தவரை பிழைகள் இல்லாமல் இருப்பது நல்லது.
8. ரெஷ்யூமில் போல்டு மற்றும் இட்டாலிக் எழுத்தில் இருக்கலாம். ஆனால் ஒரே சைஸ் எழுத்தாக இருக்க வேண்டும்.
9. ரெஷ்யூமை கலர் கொண்டு அலங்காரம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
10. ஒரு நிறுவனத்திற்காக தயார் செய்த ரெஷ்யூமை, மற்ற எல்லா நிறுவனத்திற்கும் அனுப்பக் கூடாது. ஒவ்வொரு நிறுவனத்துக்கும் விண்ணப்பிக்கும் போது, பிரத்யேகமாக ரெஷ்யூமை தயாரித்து அனுப்புவது மிகவும் நல்லது.
11. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ரெஷ்யூமை பார்த்து புதிய தகவல்களைச் சேர்த்து, அதை எப்போதும் புத்தம் புதிதாய் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். (குறிப்பாக: மொபைல் நம்பர்)
12. நீங்கள் வேலைக்கு விண்ணப்பிக்கும் போது, எதற்காக விண்ணப்பிக்கிறீர்கள்?. நீங்கள் வேலைக்கு சேருவதன் மூலம் அந்த நிறுவனத்திற்கு என்ன லாபம்? என்பதைக்கூட நீங்கள் குறிப்பிட்டு அனுப்பலாம். அப்படி அனுப்பும்போது கவனமாக வார்த்தைகளைக் கையாள வேண்டும்.
13. மொபைல் நெட்ஒர்க் பிரச்சனை இருப்பதனால், ரெஸ்யூமேவில் இரண்டு மொபைல் நம்பர்களை கொடுத்தால் மிகவும் நன்று.
“பல மாணவர்கள் ரெஷ்யூமில் தவறு செய்வதனால் தான், அடுத்தகட்ட சுற்றுக்கு நுழைய முடிவதில்லை. காரணம், மாணவர்களைப் பற்றி எங்களுக்கு தெரியாது, அவர்கள் கொடுக்கும் ரெஷ்யூமை வைத்து தான் தெரிந்துகொள்ள வேண்டும். ரெஷ்யூமில் குறிப்பிட்டிருக்கும் தகவல் குறைவாக இருந்தால் நிராகரிக்கப்படும். அதுமட்டும் இல்லாமல், நேர்காணலில் ஒரு மாணவரிடம் ரெஷ்யூமில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களைப் பற்றி கேள்வி எழுப்பினால். சரியான பதில் சொல்வதில்லை. அதன் மூலம், ரெஷ்யூமை அந்த மாணவர் தயார் செய்யவில்லை என்றும், அவரின் நண்பர்கள் உதவி செய்துள்ளார்கள் என்றும் தெரிந்துவிடும். பல மாணவர்கள் ரெஷ்யூமில் பிராஜெக்ட் பற்றிய தகவல்களை கொடுப்பதில்லை.
நேர்கானலில், ”பிராஜக்ட் பற்றி கேட்டாள்”. சரியான தகவல்களும் சொல்வதில்லை. ரெஷ்யூமில் இ-மெயில் ஐ.டி கொடுக்கப்பட்டிருக்கும், அந்த ஐ.டிக்கு தொடர்புகொண்டால், ரிப்ளை கூட வருவதில்லை. அலட்சியம் காரணமாக அதுபோன்று நிறைய மாணவர்களை நிராகரித்துள்ளோம். நேர்காணலில் அதிகமாக “உங்களைப் பற்றி சொல்லுங்கள்” என்று மாணவர்களிடம் கேட்போம், அதற்கு அவர்கள் ரெஷ்யூமில் இல்லாததை சொல்ல வேண்டும் என்று தான் எதிர்பார்ப்போம். நிறுவனங்களுக்கு ரெஷ்யூமை அனுப்பும்போது முழு தகவல்களுடனும், நிறுவனத்திற்கு சம்பந்தமான பிராஜெக்ட்களும் செய்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். நேர்காணலுக்கு செல்லும் மாணவர்கள் ரெஷ்யூமில் இருக்கும் தகவல்களை பலமுறை பார்த்துச் செல்வது நல்லது” என்கிறார் எஸ்.ஆதித்யா பட்னாக்கர், ஹெச்.ஆர், தனியார் நிறுவனம்.
வெற்றியை ரெஸ்யூமே மூலம் “சொல்லி அடி”ப்போம்.
மேலும் சொல்லி அடி பாகம்- 1 தொடரை படிக்க: http://www.puthiyathalaimurai.com/news/special-news/41668-solli-adi-a-special-article-for-youngsters.html