Avimukteshwaranand
Avimukteshwaranand pt web
சிறப்புக் களம்

பிரதமர் மோடிதான் காரணமா? - அயோத்தி ராமர் கோவில் விழாவுக்கு செல்ல பீடாதிபதிகள் மறுக்க காரணம் என்ன?

Jayashree A

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்களுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான துறவிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களும் லட்சக்கணக்கில் அயோத்தியில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் முக்கியமான பீடாதிபதிகள் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வில், கலந்துகொள்ள மாட்டார்கள் என உத்தரகாண்ட் ஜோதிஷ் பீடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் ஜோதிஷ் பீடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி

இது குறித்து இவர் கூறும் பொழுது, “இந்து மதத்தின் விதிமுறைகளை பின்பற்றாததால் சங்கராச்சாரியார்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமாட்டார்கள். கோவிலை கட்டி முடிக்காமல் சிலைகளை நிறுவுவது இந்து மதத்திற்கு எதிரானது. அவ்வளவு அவசரம் தேவையில்லை. கோவிலை கட்டிமுடிக்க போதுமான காலம் உள்ளது. அதன்பிறகு பிரதிஷ்டைகளை முடிக்க வேண்டும். நாங்கள் மோடிக்கு எதிரானவர்கள் அல்ல. அதேவேளையில் எங்கள் தர்ம சாஸ்திரத்திற்கு எதிராகவும் செல்ல முடியாது” என தெரிவித்தார்.

ஒடிசாவின் பூரி மடத்தின் தற்போதைய பீடாதிபதியான சுவாமி நிச்சலானந்தா சரஸ்வதி

கடந்த சில தினங்களுக்கு முன் ஒடிசாவின் பூரி மடத்தின் தற்போதைய பீடாதிபதியான சுவாமி நிச்சலானந்தா சரஸ்வதி கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்ளப்போவதில்லை என தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “எங்கள் மடத்துக்கு அயோத்தியிலிருந்து அழைப்பிதழ் வந்துள்ளது. நான் அங்கு செல்வதாக இருந்தால், ஒரு உதவியாளருடன் வரலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நூறு பேருடன் வந்தாலும் அனுமதிக்கப்படுவீர்கள் என்று சொன்னாலும்கூட, அந்த நாளில் நான் அங்கு செல்ல மாட்டேன். கோவர்தன பீடம்/மடத்தின் அதிகார வரம்பு பிரயாக் வரை பரவியுள்ளது. ஆனால் குடமுழுக்கு நிகழ்ச்சி குறித்து எங்களிடம் ஆலோசனையோ அல்லது வழிகாட்டுதலோ பெறப்படவில்லை” என தெரிவித்திருந்தார்.

யார் இந்த பீடாதிபதிகள் ஏன் இவர்களுக்கு இத்தனை முக்கியத்துவம் என்பதை பார்க்கலாம்.

ஆதிசங்கரர் கிமு 509 ல் காலடியில் பிறந்தார். இவர் இந்துமதத்தை குறிப்பாக அத்வைத சித்தாந்தத்தை தலைத்தோங்க செய்யவேண்டி இந்தியாவில் மடங்களை நிறுவினார்.

அதன்படி இதில் கிழக்கே பூரி ஜெகந்தாத்தில் ரிக் வேத ப்ரதானமாக கோவர்த்தன மடத்தை நிறுவி அதற்கு பீடாதிபதியாக பத்மபாதரை நியமித்தார்.

தெற்கே சிருங்கேரியில் (Sri Sringeri Sharada Peetam) யஜூர் வேத ப்ரதானமாக கொண்டு அதற்கு சுரேஷ்வராச்சாரியாரை பீடாதிபதியாக்கினார்.

மேற்கே துவாரகாவில் சாம வேதத்தை ப்ரதானமாகக் கொண்டு ஹஸ்தமாலாகாவை பீடாதிபதியாகக் கொண்டு ஒரு மடத்தை நிறுவினார்.

வடக்கே பத்ரிநாத்தில் அதர்வண வேதத்தை ப்ரதானமாகக் கொண்டு ஒரு மடத்தை நிறுவி அதற்கு தோடகாச்சாரியாரை பீடாதிபதியாக்கினார்.

இதில் ஐந்தாவது மடமாக காஞ்சிபுரம் திகழ்கிறது. (kamakoti.org) அதாவது ஆதிசங்கரர் கைலாசத்தில் கிடைத்த ஸ்படிக லிங்கங்களில் ஒன்றை காஞ்சியில் ஸ்தாபனம் செய்து காஞ்சி நகரை மறுசீரமைத்தார் என்று சொல்லப்படுகிறது.

காஞ்சி மடம்

இந்த மடங்களின் முக்கிய நோக்கம் அத்வைத சித்தாந்தத்தை உலகம் முழுதும் பரப்புவதற்காகவே ஸ்தாபனம் செய்யப்பட்டது. மேலும் தர்மசாஸ்திர முறைப்படி, அரசனுக்கு நாட்டை ஆளும் அதிகாரமும், வேதம் கற்றவன் கடவுளை ஸ்தாபனம் செய்வதற்கும் என்று ஒவ்வொரு வர்ணத்தினருக்கும் முக்கிய சாஸ்திர சம்பிரதாயங்கள் வேதசாஸ்திரங்களில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதை பீடாதிபதிகள் முறையாக பின்பற்றுவதால் அயோத்தியில் தர்மசாஸ்திர முறை தவறி பிரதமர் ஸ்தாபனம் செய்யும் ஸ்ரீராமர் கோவிலுக்கு செல்ல மறுத்து வருகின்றனர்.