Seeman  Candidate Abinaya
Seeman Candidate Abinaya pt desk
சிறப்புக் களம்

"மருத்துவப் படிப்பை பாதியில் விட்டுவிட்டேனா.?" சீமான் பேச்சும், தருமபுரி நாதக வேட்பாளரின் விளக்கமும்

Kaleel Rahman

தருமபுரி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் அபிநயா பொன்னிவளவனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்... ”மருத்துவம் படித்துக் கொண்டிருந்த பெண்ணின் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு தேர்தலில் நிற்க வைத்துள்ளேன்” என்று பேசியிருந்தார்.

பரப்புரை

இவரது பேச்சிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். சமூக வலைதளங்களிலும் பலரும் விமர்சனங்களை முன் வைத்தனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் அபிநயாவை தொடர்பு கொண்டு இதுகுறித்து பேசினோம். நம்மிடம் அவர் பேசியதாவது:-

ஒவ்வொரு இடத்திலேயும் மேற்படிப்பு படிக்கிறார் என்று சொல்ல வேண்டிதில்லை:

வேட்பாளர் அறிமுக கூட்டத்திலேயே அண்ணன் (சீமான்) சொல்லியிருக்காரு மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார் என்று. ஒவ்வொரு இடத்திலேயும் மேற்படிப்பு படிக்கிறார் என்று சொல்ல வேண்டிதில்லை. படிப்பு இடைநிறுத்தம் என்று சொல்லாமல் மருத்துவப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு தேர்தலில் நிற்க வைத்துள்ளேன்னு ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார். நான் பிஎஸ்எம்எஸ் முடித்துவிட்டு, எம்டி மெடிசன் டிபார்ட்மெண்ட் எடுத்து படித்துக் கொண்டு இருக்கிறேன்.

Seeman

மகாராஷ்டிராவில் படிப்பதால் 6 மாதங்கள் காலதாமதமாகி இருக்கிறது:

அது 3 வருட படிப்பு அதில் இரண்டரை ஆண்டுகள் முடிந்து விட்டது. நான் 2020-ல் படிப்பில் சேர்ந்தேன். இந்நேரம் படிப்பு முடிந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இந்த படிப்பில் சேர்ந்தவர்கள் எல்லோரும் கடந்த டிசம்பரிலேயே படிப்பை முடித்து விட்டார்கள். ஆனால், 2020 கொரோனா காலம் என்பதாலும், மகாராஷ்டிராவில் படிப்பதாலும் 6 மாதங்கள் காலதாமதமாகி இருக்கிறது. மகாராஷ்டிரா ஹெல்த் அண்டு சயின்ஸ் யூனிவர்சிட்டியில காலதாமதம் ஆனது.

கல்லூரியில் அனுமதி பெற்றுதான் தேர்தல் களத்துக்கு வந்திருக்கேன்:

தேர்வுக்கு இன்னும் ஒருமாதம் இருப்பதால் கல்லூரியில் அனுமதி பெற்றுதான் தேர்தல் களத்துக்கு வந்திருக்கேன். ஆயுர் டிபார்ட்மெண்ட்ல இருந்து இப்படியொரு வாய்ப்பு கிடைப்பது நல்ல விசயம்தானே நீ போம்மான்னு அவங்களும் அனுமதி கடிதத்தோடுதான் அனுப்பியிருக்காங்க. என்னோட விருப்பம், கல்லூரியின் ஒப்புதல் என எல்லாமே முறைப்படிதான் நடக்குது. படிப்பை பாதியிலேயே நிறுத்திட்டு, சட்ட விரோதமா பணம் கொடுத்து சான்றிதழ் வாங்கினேன் என்பதெல்லாம் இல்லை. அறிமுக கூட்டத்துல அண்ணன் தெளிவா சொன்னாரு. ஆனா, இங்கு டக்குன்னு மேலோட்டமா சொல்லிட்டதால அப்படி தெரியுது” என்றார்.