சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பொறுத்தவரை வடக்கே பி. என் கண்டிகை பகுதியில் 17.3 கிலோமீட்டர் தூரம் வரையிலும், தெற்கே உத்தண்டி பகுதியில் 1.5 கிலோமீட்டர் தூரம் வரையிலும் கடல் நீர் நிலப்பகுதிக்குள் ஊடுருவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையின் ஒட்டுமொத்தப் பரப்பளவில் 84 சதவீத இடங்கள் கட்டடங்களாக மாறியுள்ளதால், பருவமழைக் காலங்களில் நகரின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக இந்த மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கை எச்சரிக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் நல்ல மழைப்பொழிவு இருந்தபோதிலும், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளின் அதிகப்படியான நிலத்தடி நீர் சுரண்டல் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து சரிந்துவருகிறது. பல்லாவரம், கிண்டி, புழல் ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தாலும், சோழவரம், தரமணி, அடையாறு போன்ற பகுதிகளில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. இதனைத் தடுக்க, மழைநீர் சேகரிப்பு, கழிவுநீர் மறுசுழற்சி மற்றும் நிலத்தடி நீர் எடுப்பதைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம் என்று வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.