சென்னையிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இருந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகளில் தற்போது 3 ஆயிரத்து 896 மட்டுமே எஞ்சியுள்ளன. மாநகரப் பகுதியில் மட்டும் சுமார் 2 ஆயிரத்து 400 ஏக்கர் பரப்பளவிலான 150 நீர்நிலைகள் குடியிருப்புத் திட்டங்களுக்காக மாற்றப்பட்டுள்ளன. நகரின் இயற்கை குளிர்ச்சிப் பாதைகளாக இருந்த ஈரநிலங்கள் அழிக்கப்பட்டதே, சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்துக்கும் தண்ணீர்ப் பற்றாக்குறைக்கும் முதன்மைக் காரணமாகும். அதேபோல், பெங்களூருவில் கடந்த 25 ஆண்டுகளில் ஏரிகள் இருந்த பரப்பு 30 சதவீதம் வரை சுருங்கியுள்ளது. ஆயிரத்து 960களில் 920 ஏரிகளைக் கொண்டிருந்த இந்நகரில், தற்போது வெறும் 81 ஏரிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. இதனால், கடந்த காலங்களில் 19 டிகிரி செல்சியஸாக இருந்த நகரின் சராசரி வெப்பநிலை, தற்போது 37 டிகிரி வரை உயர்ந்துள்ளது.
ஹைதராபாதில் ஏரிகளின் பரப்பு 61 சதவீதமும், டெல்லியில் அதிகாரபூர்வ நீர்நிலைகளில் 49 சதவீதமும் முற்றிலும் அழிந்துவிட்டன. இயற்கையாகவே ஏரிகள் தங்களைச் சூழ்ந்துள்ள பகுதியை 4.7 டிகிரி செல்சியஸ் வரை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். அவை அழிக்கப்படும்போது ஏற்படும் 'நகர்ப்புற வெப்பத் தீவு விளைவு' காரணமாகப் பெருநகரங்கள் வெப்பமயமாகின்றன. நீர்நிலைகள் அழிக்கப்பட்டு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால், சென்னை உட்பட 21 இந்திய நகரங்கள் கடுமையான நிலத்தடி நீர் பற்றாக்குறையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக நிதி ஆயோக் எச்சரித்துள்ளது. நீர்நிலைகளைச் சட்டபூர்வமாகப் பாதுகாப்பது மட்டுமே இந்நகரங்களைக் காப்பதற்கான ஒரே வழி என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.